Latest News

கார்மெண்ட்ஸ் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை.. 5 பஸ்கள் எரிப்பு.. பெங்களூரில் பதற்றம்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. பஸ்கள் தீக்கிரையாகின. தமிழகம் செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பி.எப். சேமிப்பு பணத்தில் முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பும் பங்கு வழங்குகிறது. முதலாளியின் பங்குத்தொகையை தொழிலாளிகளுக்கு 58 வயதான பிறகுதான் எடுக்க முடியும் என்னும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் விதிமுறையை மாற்ற முன்வந்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரிலுள்ள ஆயத்த ஆடை நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள பொம்மனஹள்ளி பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்குள்ள ஊழியர்கள் நேற்று காலை முதல் மாலை வரை நடத்திய போராட்டத்தை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். நாள் முழுக்க நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர்.


இந்நிலையில், 2வது நாளாக இன்றும் காலை முதல் போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். 5 பஸ்கள் தீக்கிரையாகியுள்ளன. 5 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகிறார்கள்.


காலை 9 மணி முதல் நீடித்த போராட்டத்தால், பெங்களூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சித்தூர் வழியாக சென்னை செல்லும் பஸ்கள் மட்டும் இயங்கின. பிற வாகனங்கள் நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.