Latest News

  

மக்களே..தேமுதிக தனியா தான் போட்டியிடும் என்ற விஜயகாந்த் கூட்டணி சேர்ந்ததற்கு காரணத்தை சொல்லலாமே


நான் இந்த சட்டசபைத் தேர்தலில் யாருடனும் போகவில்லை. தனியாகத்தான் போகப் போகிறேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம். இதைத் தெளிவாகக் கூறுகிறேன் என்று திரும்பத் திரும்பத் தெளிவுபட தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டு வைத்து வெறும் 124 தொகுதிகளில் மட்டும் போட்டியிட தீர்மானித்ததற்கான காரணம் என்ன என்ற விளக்கத்தை இதுவரை விஜயகாந்த் தரவில்லை. இதுகுறித்து தேமுதிகவோ அல்லது விஜயகாந்த்தோ வேறு யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றாலும் கூட அவர்களை நம்பி வாக்களிக்கக் காத்திருக்கும் அப்பாவி வாக்காளர்களுக்காவது அவர்கள் விளக்கம் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் விஜயகாந்த் பேசிய பேச்சுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வியும் கூடவே வருகிறது.

வேடல் மாநாட்டில் ஒரு பேச்சு தமிழக சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் விஜயகா்ந்த்தும் சரி, பிரேமலதா விஜயகாந்த்தும் சரி தெளிவாகப் பேசவில்லை. தனது பேச்சில் ஜெயலலிதாவை மட்டும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் பிரேமலதா. திமுகவையும் லேசாக தொட்டு விட்டுப் போனார்.

மகளிர் தின மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு அடுத்து சென்னையில் நடந்த தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் விஜயகாந்த் பேசும்போது மிக மிகத் தெளிவாக நான் தனியாகத்தான் போட்டியிடப் போகிறேன். நாங்கள் யாருடனும் போகவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறி விட்டுச் சென்றார். நல்லா கேட்டுக்குங்க மக்களே என்று நான் தனியாகத் தான் போட்டியிடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு கூட்டம் அத்தோடு முடிய வேண்டிய நிலை. மைக்கைப் பிடித்து குழப்பிய பிரேமலதா ஆனால் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசி முடித்த பிறகு, மைக்கை எடுத்து தன் பங்குக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த். பேச வருகிறவர்கள் பேச வரலாம் என்று அவர் பேசி முடித்தார். அதாவது விஜய்காந்த் தனியே போட்டி என்று சொல்ல, பிரேமலதாவோ பேச வரலாம் என கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இப்போது ஒரு முடிவு இந்த நிலையில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, முரணாக, மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்துள்ளது தேமுதிக. இது ஏன் என்பதற்கு யாருமே இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதற்கு முன்பு வரை வீராவேசமாக பேசி வந்த விஜயகாந்த் தற்போது தனது முடிவிலிருந்து பல்டி அடித்தது ஏன் என்பது குறித்து இதுவரை விளக்கம் தரவில்லை. கப்சிப்பென்று இருக்கிறார். ஏன்?. தனித்துப் போட்டி என்றவர் இப்போது கூட்டணி அமைத்துள்ளதால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டியது அவசியம் தானே!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.