Latest News

குண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள் 2 பேர் கொலை! தூத்துக்குடியில் பதற்றம்


அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். தென் மாவட்ட நாடார் ஜாதி மக்களிடையே பிரபலமாக விளங்கிய இவர் 2003ம் ஆண்டு சென்னையில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெங்கடேச பண்ணையாரை தொடர்ந்து அவரது சகோதரர், சுபாஷ் பண்ணையார் 'சாம்ராஜ்யத்தை' தொடர்கிறார். பண்ணையார் குடும்பத்திற்கும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனுக்கும், நடுவே இருந்த முன்பகை காரணமாக, இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவ்வப்போது கொலை செய்யப்பட்டு வந்தனர். பசுபதி பாண்டியனும், திண்டுக்கல் அருகே சில வருடங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார், அவரின் உதவியாளரும், முடிதிருத்தும் தொழிலாளியுமான, ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சுபாஷ் பண்ணையார் தூத்துக்குடி அருகேயுள்ள பழையகாயல் சர்வோதயாபுரியில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென 20 பேர் கொண்ட கும்பல் அங்கு புகுந்தது. பண்ணையாரை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி அந்த கும்பல் முன்னேறி வந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடியுள்ளனர். இருப்பினும் கையில் கிடைத்தவர்களை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டத் தொடங்கியுள்ளது. இதில், ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி ஆகிய இருவர் உயிரிழந்தனர். பின்னர், கொலைக் கும்பல் ஆறுமுகச்சாமியின் தலையை மட்டும் துண்டித்து கையோடு எடுத்துச் சென்றுள்ளது. துண்டிக்கப்பட்ட ஆறுமுகச்சாமியின் தலை தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் உள்ள தெய்வச்செயல்புரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனின் படத்துடன் கூடிய பெயர்பலகையின் கீழ் வீசப்பட்டிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோட்ட பராமரிப்பு பணிகளை சுபாஷ் பண்ணையார், கடந்த நான்கு நாள்களாக கண்காணித்து வந்ததுள்ளார். இதை நோட்டமிட்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பழிக்குப்பழியாக இந்த கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜாதி மோதலை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.