Latest News

”எங்கள் குழந்தைப்பருவம் எங்களுக்கே வேண்டும்”- தாய்நாட்டிற்காக கண்ணீர் சிந்திய சிரியா குட்டி பாடகி


சிரியாவின் அராபிக் டேலன்ட் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய சிறுமி, தனது தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும் என்று கண்ணீர் சிந்தி பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டுப்போர் காரணமாக அப்பாவி மக்கள் உடமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மேலும், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை, அமைதியின்மை போன்ற காரணங்களால் மக்கள் நிம்மதியின்றி தவித்த வருகின்றனர்.

அராபிக் டேலன்ட் ஷோ: இந்நிலையில் லெபனானில் நடைபெற்ற பாட்டுப்போட்டி நிகழ்ச்சியான அராபிக் டேலண்ட் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹைனா போவ் ஹெம்டன்ஸ் என்ற சிறுமி, எங்கள் தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும், எங்களின் குழந்தை பருவத்தை நாங்கள் பெற வேண்டும் என்ற பாடலை பாடியுள்ளார்.

கட்டியணைத்த நான்சி அஜ்ரம்: இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தபோது, அச்சிறுமி தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார், அழுகையை கட்டுப்படுத்த முடியாமலும், மேற்கொண்டு பாடலை பாட முடியாமலும் திணறிய அச்சிறுமியை பார்த்த நடுவரான லெபனான் பாடகி நான்சி அஜ்ரம் உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று அச்சிறுமியை கட்டியணைத்து பாடலை பாட தொடர்ந்து உற்சாகப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு சிறுமியுடன் சேர்ந்து அப்பாடலை பாடியுள்ளார்.

கண்ணீர் சிந்திய உறவினர்கள்: மற்ற இரு நடுவர்களும் சிவப்பு பொத்தானை அழுத்தி அச்சிறுமியை அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்தனர், மேலும் இவரின் பாடலால் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் இச்சிறுமியின் உறவினர்களும் உணர்ச்சிபூர்வமாக கண்ணீர் சிந்தி அச்சிறுமியை உற்சாகப்படுத்தினர்.

யூடிபில் கலக்கும் வீடியோ: லெபனான் பாடகியான நான்சி அஜ்ரம் அச்சிறுமியை, தனது குழுவில் பாடுவதற்கு தேர்வு செய்துள்ளார். தற்போது யூடியுபில் வெளியான இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.