இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றி திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க ‘புன்னகையைத்தேடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் ‘புன்னகையைத்தேடி’ திட்டத்தை ஜனவரி 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஆர்.எஸ்.நல்லசிவம் அறிவுரையின்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் எஸ்.ஜெயக்குமாரின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் துணை கமிஷனர் சி.சியாமளா தேவி இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக உள்ளார்.
124 சிறுவர்–சிறுமிகள்
திட்டத்தின்படி, சென்னையில் காணாமல் போன, வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், ஆதரவற்ற, தெருவோரங்களில் ஆதரவற்று சுற்றித்திரிந்த சிறுவர்கள், வியாபார பணிகளில் ஈடுபட்டு வந்த 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்விற்காக சிறுவர் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், காணாமல் போன சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் சென்னையில் சுமார் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், இதுவரை 124 சிறுவர்கள்(78 சிறுமிகள் உள்பட) கண்டுபிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய குழந்தைகளை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1098 இலவச தொலைபேசி எண்
பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளையோ, தெருவோரங்களில் ஆதரவற்று சுற்றித்திரியும் குழந்தைகளையோ மற்றும் தெருவோரங்களில் வியாபாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் குழந்தைகளையோ கண்டால் உடனடியாக சென்னை காவல்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 1098 என்ற குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment