Latest News

எங்கள் துக்கம் இன்னும் முடியவில்லை.. கலாமின் பெயரை வீணாக இழுக்காதீர்கள்: அப்துல் கலாம் பேரன் ஆதங்கம்


அப்துல் கலாமின் பெயர் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குவதை விரும்பவில்லை என்று அவரது பேரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த நிலையில், அவரது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான சர்ச்சை வெடித்தது. அப்துல் கலாமிடம் நீண்ட காலமாக உதவியாளராக அறிவியல் ஆலோசகராக இருந்து வந்த வி. பொன்ராஜ் மற்றும் அப்துல் கலாமின் முன்னாள் மாணவரான ஸ்ரீஜன் பால் சிங் ஆகியோருக்கு இடையே இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீஜன் பால் சிங், அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களைப் பயன்படுத்தி வருவதற்கும் அப்துல் கலாமின் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்துல் கலாமின் பேரனான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம், 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த சிறப்பு பேட்டியில் ஆதங்கம் வெளிப்படுத்தினார். இதுபோன்ற சர்ச்சை தேவையற்றது என்றார் அவர். ஷேக் சலீம் கூறியதாவது: சமூக வலைத்தளங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை பற்றி எங்கள் குடும்பமும் அறிந்துள்ளது. இதுதொடர்பாக நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஏனெனில், கலாமின் பெயர், சர்ச்சைகளில் அடிபடுவதை நாங்கள் விரும்பவில்லை. கலாமின் அலுவலக அதிகாரிகள், நலம் விரும்பிகள், நண்பர்களுக்கு எல்லாம், எங்கள் குடும்பம் மொத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்; துக்க நாட்கள் இன்னும் எங்களுக்கு முடிந்துவிடவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். கலாமின் ஆத்ம சாந்திக்காக, தினசரி 'துவா' (வழிபாடு) நடத்திவருகிறோம். ஆகஸ்ட் 10ம் தேதி, கலாமின் 15வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது. செப்டம்பர் 4ம் தேதி 40வது நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அன்று, கலாமுக்கு பிடித்த உணவு பண்டங்கள் படையலிடப்படும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜமாத் பிரதிநிதிகள் வழிகாட்டுதல்படி நடக்கும். அரசின் பார்மாலிட்டிஸ் அனைத்தும் முடியட்டும் என்று காத்திருக்கிறோம். கலாமின் அறை பூட்டப்பட்டே இருக்கிறது. கலாம் எழுதிய புத்தகங்கள் மற்றும் பிற சொத்துக்களை அரசு எங்களிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். கலாமின் குறிக்கோள், இலக்கு எந்தவித விளம்பரமும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியா முன்னேறிய நாடாக வேண்டும் என்பதே கலாமின் விருப்பம். இந்நிலையில், பலரும் சேர்ந்து கலாமுக்காக உரிமை கொண்டாடுவது சரியில்லை. கலாமின் குடும்பமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு சலீம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.