சென்னையிலிருந்து புறப்பட்ட டோர்னியர் விமானம் பிச்சாவரம் காடுகளில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிஜி-791 ரக டோர்னியர் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டது. இரவு 10.23 மணியிலிருந்து ரேடாரின் கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் விலகி மாயமானது.
அதன் பின்னர் விமானத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானம் மாயமான தருணத்தில், ஒரு மர்ம பொருள் வானில் தீப்பிடித்து எரிந்தது கடலில் விழுந்ததை பார்த்தாக நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுச்சேரி மீனவர் முகேஷ் என்பவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து புதுவை நாவற்குளத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை தலைமை அலுவலகத்தில் மீனவர் முகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சிதம்பரம் அருகே பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்பதால், அங்கு கடலோர காவல் படை விமானங்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.


No comments:
Post a Comment