Latest News

எங்கே போகிறது இந்தியா…..!!!


வேற்றுமையில் ஒற்றுமை, எனும் வலுவான அடித்தளத்தின் மீது தான் இந்தியா எனும் கட்டிடம் வானுயர கம்பீரமாக எழுந்து நிற்கிறது! அந்த அஸ்திவாரத்திற்கே ஆபத்து வந்ததென்றால், தேசத்தின் நிலை?, அப்படிப்பட்ட ஆபத்து விரைவில் நடந்துவிடுமோ என்ற ஐயப்பாடு சமீபத்திய மத்திய அரசின் செயல்பாடுகளின் மூலம் எழுகிறது!!

இந்தியாவில் நாம் பன்முக சமூகமாக வேற்றுமைகளை மறந்து இந்தியன் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். இந்த உணர்வு நீடிக்க வேண்டுமானால் ஆளுகின்ற அரசாங்கம் ஒவ்வோரு மாநிலத்தின் கலாச்சாரம், மொழி, உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.

அரசானைகள், விளம்பரங்கள், அரசு இணையதளம் ஆகியவற்றில் இந்தியே பிரதானமாக பயன்படுத்தப்படும் என்ற உத்தரவின் வாயிலாகவும், சமஸ்கிருதம் இனைப்பு மொழியாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பின் வாயிலாகவும், பிராந்திய மொழிகளுக்கு அளிக்க வேண்டிய கன்னியத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது மோடி அரசு! பள்ளிகளில் சமஸ்கிருத வாரம், ஆசிரியர் தினத்தை குருஉட்ஷவ் என இந்திப்பெயரில் இல்லாத நடைமுறைகளை புகுத்தி நாட்டில் ஆங்காங்கே தம் மொழி காக்க மக்களை போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது மோடி அரசு!!

அடுத்த ஒன்றாக, நாட்டில் எவ்வளவோ மிக முக்கிய பிரச்சனைகள் இருக்க அவற்றிற்க்கெல்காம் நிதி ஒதுக்கி கவனம் செலுத்தாத மத்திய அரசு, கிட்டத்தட்ட 3000கோடி செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வடிக்க முடிவெடுத்து நிதியும் ஒதுக்கியுள்ளது. இதை அவர்கள் படேலின் மீதுள்ள பற்றினாலோ, பாசத்தினாலோ இதை செய்யவில்லை. இதன் பின் ஒரு மிகப்பெரிய அரசியல் அடங்கியிருக்கிறது. அவர்களுடைய நோக்கம் பட்டேலை முன்னிலைப்படுத்தி, காந்தி மற்றும் நேரு மீதான நினைவுகளை மக்கள் மனதில் இருந்து பின்னுக்குத்தள்ளுவதாகும். இதன் மூலம் அவர்களின் அடையாளமாக திகழும் காந்தியை கொன்ற கும்பல் எனும் அடையாளத்தை மக்களிடையே மறக்கடிக்க செய்யலாம் என்பது அவர்களின் கணக்கு.

இதன் தொடர்ச்சியாக இதற்கான ஆயத்தப்பணிகளை ஆரம்பித்துவிட்டன ஆர்.எஸ்.எஸ் ம் பாஜகவும், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வார இதழில் கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய கட்டுரையில் "காந்திக்கு பதிலாக நேருவை கோட்சே கொன்றிருக்க வேண்டும்!" என்றும், "மகாத்மா காந்தியைப் போல அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவும் சிறந்த தேசபக்தரே" என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சாக்சி மகாராஜும் பேசியிருப்பதன் வாயிலாக இவற்றை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

இது ஒருபுறம் இருக்க , பல்வேறு சமய மக்கள் கதம்ப மலர் தோட்டமாக இணக்கமாக வாழகூடிய நம் நாட்டில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் உபயத்தால் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 600க்கும் மேற்பட்ட மதக்கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பல சமய மக்கள் வாழும் நாட்டை ஆள்பவர் பெரும்பான்மை, சிறுபான்மை என அனைவரையும் சமமாக மதித்து வழிநடத்த வேண்டும், ஆனால் இந்திய மக்களின் பிரதிநிதியாக வெளிநாட்டு தலைவர்களுக்கு கீதையை பரிசளித்து இந்த சமய குரோதத்தை கொடியசைத்து துவங்கியுள்ளார் பிரதமர் மோடி!

ஒரு சமய நூலான பகவத் கீதையை பல சமய மக்கள் வாழும் நாட்டின் தேசிய நூலாக்குவோம் என்கின்றார் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்! இது எப்படி சாத்தியமாகும் , ஜாதியை வலியுறுத்தும் நூல் ஜாதியே இல்லாத மக்களுக்கு எப்படி தேசிய நூலாகும்?

அதன் தொடர்ச்சியாக, உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தாஜ்மஹாலை இந்துக்கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று ஒரு புனையப்பட்ட கதையை சொல்லி மக்கள் மனதில் மத வெறியை விதைத்திருக்கிறார் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய்.

இன்னும் ஒருபடி அதிகமாக நாட்டில் வாழும் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருமே ராமரின் பிள்ளைகள்,இதை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்" என்று மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியிருக்கிறார். ஒரு மத்திய அமைச்சரே இப்படி பேசியிருப்பது இந்த அரசின் லட்சியத்தை பறைசாற்றுகிறது!

ஆக்ராவில் ஏழை முஸ்லீம்களை ரேசன் கார்ட், ஆதார் அட்டை எடுத்துத்தருவதாக அழைத்து சென்று இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து பெரும் சர்ச்சைகளை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதை தொடரப்போவதாகவும், மதமாறினால் பணம் தருவதாகவும் அறிவிப்பு செய்திருப்பது, ஜனநாயகத்தை நம்பிக்கொண்டிருப்பவர்களை வேறு வழியில் சிந்திக்கத்தூண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

இப்படியாக இந்தியாவின் கட்டமைப்பை குழைக்கக்கூடிய பல்வேறு சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கிறது, இவற்றிற்க்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய மத்திய அரசோ, ஆர்.எஸ்.எஸ் எனும் வகுப்புவாத சக்தியின் வழிகாட்டுதல் படிதான் ஆட்சி நடக்கிறது என பாராளுமன்றத்தில் அப்பட்டமாக அறிவிக்கிறது, இதுவே இந்திய தேசத்தின் மீது பற்று கொண்ட நம் போன்றோருக்கு பெருத்த கவலையளிக்கிறது!!

இந்த நாட்டின் அஸ்திவாரத்தை காக்க உணர்வுள்ள இந்தியனாய் எதையும் எதிர்கொள்ள தயாராவோம்!!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.