வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடி வரும் ரயில்வேத்துறையின் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே, 6 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படுவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதனால் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணத்தை உயர்த்த மூத்த அதிகாரிகள் பரிந்துரை செய்திருப்பதாக ரயில்வேத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டீசல் விலை உயர்வை அடிப்படையாகக்கொண்டு, பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது என்ற அரசின் முடிவையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகளின் கட்டணம், சரக்குகள் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தவிர்க்க முடியாத காரணங்களால், உடனடியாக கட்டணத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், ரயில்வேயின் நிதிச்சுமையின் ஒரு பகுதியை பயணிகள் மீது சுமத்துவது தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:
Post a Comment