Latest News

திமுக கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை -வைகோ பரபரப்புப் பேச்சு


ஈரோடு: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததில் துளிக் கூட அரசியல் இல்லை. அது அரசியல் நாகரீக சந்திப்பு. எப்படி நடைபயணத்தின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தேனோ அதேபோல மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என்று மதிமுக பொருளாளர் வைகோ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ராமதாஸின் பேத்தி -பேரன் திருமணத்தின்போது வைகோ -ஸ்டாலின் சந்திப்பால் கிளம்பிய கூட்டணி பரபரப்பு, காங்கேயத்தில் இன்று நடந்த ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளர் கணேசமூ்ர்த்தியின் மகன் திருமண விழாவின்போது வைகோ பேசிய பேச்சால் மேலும் பரபரப்பாகியுள்ளது.

கடந்த வாரம் பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தி திருமண விழாவில் கலந்து கொண்ட போது திமுக பொருளாளர் ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்துக் கொண்டனர். இதனால், இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின.

மு.க.ஸ்டாலின் வைகோ சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். வைகோவும், நானும் பகைவர்கள் அல்ல, சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

அதேபோல மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்தார்.

மேலும், ராமதாஸ் இல்லத் திருமண விழாவைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு மதுரை சென்ற வைகோவும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தெரிவிக்கப் படும் எனவும், வைகோவுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கணேசமூர்த்தியின் மகன் கபிலன்-திவ்யா திருமணம் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேரன் திருமணத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நான் நடை பயணத்தின்போது ஜெயலலிதாவை சந்தித்தேன். அதுபோன்ற மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது.

மு.க.ஸ்டாலினை சந்தித்ததை கூட்டணியின் தொடக்கம் என்று கூறுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் அதிகம் உள்ளது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்திகள் வெளியானது

திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகள் எந்த ரூபத்தில் வந்தாலும் ம.தி.மு.க. எதிர்க்கும் என்று கூறினார் வைகோ.
வைகோவின் இந்த விளக்கத்தால் புதிய பரபரப்புக் கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.