Latest News

அதிரை சொந்தங்களே இன்னுமா தயக்கம் ?

(இன்று 14.11.2014 அதிரை ஜும்ஆப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட பிரசுரம்)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அல்லாஹ்வின் அடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

23.12.2012 பகல் 2.45 மணி!

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹா கபுருக்கு சந்தனம் பூசுவதற்காக  மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் இறப்பெய்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வழக்கமாக வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்றுமணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து பார்க்காமல் வாயிலில் காத்துக் கிடந்தனர் பலர். ஓருயிர் பலியான பின்னும் இந்த அறிவீனத்தை விட்டொழிக்கஇன்னுமா தயக்கம்?

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துபட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, "அல்லாஹ்வுடைய மௌத்து" என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?

என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையின் கடற்கரைத் தெருவில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்குமேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் அந்தக் கபுருக்கு சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமா தயக்கம்?

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?

"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்"அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .                 `

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்" அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பதை மக்களுக்குத் தெளிவாக, உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், மறுமையில் அவர்களுக்குக் கூடுதல் கேள்வியுண்டு. "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுள் ஒன்று" என்று பிற மதத்தவர்  குறிப்பாக அரசு அதிகாரிகள்  தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். அதனால்தான் இதில் தலையிடத் தயங்குகின்றனர்."கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுக்கு எதிரானது; தடை செய்யப்பட வேண்டிய ஒன்று" என்று அரசு அதிகாரிகளுக்குப் புரியும்படி வெளிப்படையாக, தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது மார்க்க அறிஞர்களின் பொறுப்பாகும். ஆலிம்களுக்கு இன்னுமா தயக்கம்?

கந்தூரி ஆதரவாளர்கள், 'பெரியாரின் பெயரால் கந்தூரி' எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெறவேண்டும்; அதற்கு வல்ல அல்லாஹ்வின் அருள் துணை நிற்க வேண்டும்.

thanks to

அதிரை தாரூத் தவ்ஹீத்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.