Latest News

சிதம்பரம் ஓட்டலில் கல்லூரி மாணவிகள் 2 பேர் கற்பழிப்பு உடன் படித்த மாணவர் கைது


ஆசை வார்த்தை கூறி தர்மபுரியில் இருந்து சிதம்பரத்துக்கு அழைத்து வந்து ஓட்டலில் 4 நாட்கள் தங்க வைத்து கல்லூரி மாணவிகள் 2 பேரை கற்பழித்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் பி.அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சக்திவேல் (வயது 21). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவிகள் 2 பேரிடம் இவர் நெருங்கி பழகி வந்தார். கடந்த 14-ந் தேதி சக்திவேல் அந்த மாணவிகளிடம், தனக்கு இந்திய ராணுவத்தில் வேலை கிடைத்து உள்ளது. இதனால் சிதம்பரம் கோவிலுக்கு சென்று 3 பேரும் சாமி கும்பிட்டு விட்டு வரலாம் என்று கூறினார்.

இவரின் ஆசை வார்த்தையை நம்பிய அந்த 2 மாணவிகளும் கோவிலுக்கு செல்ல சம்மதித்தனர். அதன்படி, அன்று மாணவிகள் 2 பேரையும் சக்திவேல் தர்மபுரியில் இருந்து ரெயில் மூலம் சிதம்பரத்துக்கு அழைத்து வந்தார்.

சிதம்பரம் ஓட்டலில் கற்பழிப்பு

சிதம்பரத்தில் அவர்கள் 3 பேரும் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். அதன்பிறகு சிதம்பரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக ஊர் சுற்றி உள்ளனர். பின்னர் சக்திவேல் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சிதம்பரத்தில் தங்கிவிட்டு காலை தர்மபுரிக்கு செல்லலாம் என்று கூறினார்.

இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் மாணவிகள் 2 பேரையும் தனித்தனியாக தங்க வைத்தார். பின்னர் சக்திவேல் மாணவிகள் 2 பேரின் அறைக்கும் மாறி, மாறி சென்று ஆசைவார்த்தை கூறி அவர்களை கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மாணவிகளை ஏமாற்றி அங்கேயே 4 நாட்கள் தங்க வைத்து மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் சக்திவேலின் கையில் இருந்த பணம் செலவழிந்து விட்டது. எனவே மாணவிகளின் தங்கத்தோடுகளை வாங்கி அவற்றை அடகு வைத்து அவர் செலவு செய்தார்.

ஊர் திரும்பினார்கள்

இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி சென்றனர். இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்றால் இத்தனை நாட்கள் எங்கு சென்றாய்? என்று பெற்றோர்கள் கேட்பார்கள் என்று மாணவிகள் 2 பேரும் பயந்தனர். இதனால் சக்திவேல் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சாந்தினியிடம் அந்த மாணவிகளை அழைத்துச் சென்றார்.

அவர் மாணவிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சிதம்பரத்திற்கு சென்று வந்ததும், அங்கே சக்திவேல் அவர்கள் 2 பேரையும் கற்பழித்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தினி இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மாணவர் கைது

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா 2 மாணவிகள் மற்றும் சக்திவேலிடம் விசாரணை நடத்தினார். அதில் மாணவிகள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்று தெரியவந்தது. இதனையடுத்து அரசு கலைக்கல்லூரி மாணவர் சக்திவேல் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மாணவிகள் 2 பேருக்கும் அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.