Latest News

அதிரை அன்சாரி வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்! - தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் தமீம் அன்சாரியை க்யூ பிரிவு போலீசார் கைது செய்த விதமும், அதன்பின் கைதுக்கு அவர்கள் கற்பித்த காரணங்களும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கின்றன.
அன்சாரியை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக க்யூ பிரிவு போலீசார் செய்த ஜோடனைகளும், அவர்களது வாதங்களும் நகைப்பிற்கிடமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது.
அதிரை அன்சாரியின் கைது சந்தேகத்திற்குரியதாகவும் நேர்மையற்றதாகவும் இருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கள ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தன்னிச்சையான உள்நோக்கம் கொண்ட கைதுகள் காஷ்மீர், டெல்லி, குஜராத், ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது தமிழகத்திலும் இந்நிலை தலைகாட்டுவது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும்.
இதுபோன்ற கைதுகள் அப்பாவி இளைஞர்களின் முழு இளமைக்காலத்தையும் அவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றன.
இதற்கு பல்வேறு மாநிலங்களில் பல சான்றுகளைக் கூறலாம். டெல்லியில் அமீர்கான் என்ற இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 14 ஆண்டுகள் கழிந்தநிலையில், குற்றமற்றவர் என அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறே ஹைதராபாத்திலும் டாக்டர் ஜுனைத் என்பவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புபடுத்தி கைது செய்து 4 ஆண்டுகளுக்குப் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் போல் ஏராளமான உண்மைச் சம்பவங்கள் நடைபெற்று சட்டவிரோத கைதுகளின் லட்சணத்தை அம்பலப்படுத்தியும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் தொடர்வது மாநில அரசுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கக்கூடியது அல்ல.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வோடு விளையாடும் இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
அதிரை இளைஞர் அன்சாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.''
- இவ்வாறு தமுமுக மூத்த தலைவர் செ. ஹைதர் அலி கூறினார்.
இந்த சந்திப்பின் போது தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது, தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: www.tmmk.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.