Latest News

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன் படி, “பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப் படும்; ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை, தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப் படும்,’ என, அறிவித்து இருந்தார். மேலும், புதிய முறையில் மாணவர்களின் இதர திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

செயல் வடிவம் : இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர், நேற்று அரசாணை வெளியிட்டுள்ளார். அரசாணையில், செயலர் கூறியிருப்பதாவது: சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2012-13) இருந்து, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என்று, பள்ளிக்கல்விக்கான மாநில பொது வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, இயக்குனர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து, வாரியத்தின் முடிவை அமல்படுத்த அரசு உத்தரவிடுகிறது.

முப்பருவ முறையால், வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் கற்பதற்கான நேரம் கிடைக்கும். புத்தகங்களில் படிப்பதை, செயல்பூர்வமாக, நேரடியாக சம்பந்தபட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மனப்பாடத்திற்கு அப்பாற்பட்டு, கல்வி சார்ந்த புரிதல்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்காக, போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் செயல் திறன்களின் வளர்ச்சி, அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும்.

ஒரு பருவத்திற்கான சிறிய பகுதிகளை மட்டும் ஆசிரியர்கள், பொறுமையாக கற்பிக்கலாம். ஆசிரியர்கள் – மாணவர்கள் ஒருங்கிணைந்து, நண்பர்கள் போன்று வகுப்பறைகளில் செயல்படவும் வகுக்கும்.

முப்பருவ கல்வி திட்டம் மற்றும் தொடர் மதிப்பீட்டு தேர்வு முறை, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.