தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக
நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர்
சந்தடியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை
வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை:
தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும்
விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.
தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள்...
கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்கவில்லை.
அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.
இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள்.
அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது
கணிசமான தொகுதிகள்.
இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம்.
மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.
ஆம் நாட்டு நடப்பைப் பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து.
அதிக பட்சத்தினர் பேசுகின்றனர்.
வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13
வாக்குகளை எண்ணும் நாள் மே-13.
இடையில் இருப்பது ஒரு மாசம்.
எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி.
எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.
இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி.
மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை...
ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை...
அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை.
அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை.
சில நாள் வளர்பிறை. சில நாள் தேய்பிறை.
இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.
இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை.
இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடுமுறை.
கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை.
தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது.
தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி
இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல்
வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்."
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment