Latest News

  

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்'

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை முதலீடு ரூ.31 ஆயிரத்து 641 கோடி ஆகும். இரண்டு வங்கிகளையும் சேர்த்து மொத்த சந்தை மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி. எல்.ஐ.சி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி ரூ.1.75 லட்சம் கோடிகளை திரட்டுவதே மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 6 பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக, வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 26 ஆயிரம் ஊழியர்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 33 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மோடி அரசின் முடிவால், இந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாரிடம் விற்றால், தமிழகத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க உறுதுணையாக இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசின் சர்வாதிகார, எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்களும், அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.