Latest News

  

2ஜி அலைக்கற்றை வழக்கு விரைந்து விசாரிக்கப்படுமா? டெல்லி உயர் நீதிமன்றம் நாளை அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு, சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அமலாக்கப் பிரிவும், 20-ம் தேதி சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுகிறார்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன்பின் கரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கின் விசாரணை நடக்கவில்லை.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுவதால், அதற்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றினால் இன்னும் தாமதமாகலாம் எனக் கூறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், 'பொதுநலன் கருதி நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.