Latest News

  

அதிராம்பட்டினத்தில் ஆற்று மணல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் சம்பந்தமாக.

அனுப்புநர்                                                                                  20-08-2020
N. முகமது மாலிக்,
சமூக ஆர்வலர்,
த/பெ கு.மு. நெய்னா முகமது,
அபுதாபி.

பெருநர்
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு,
அதிராம்பட்டினம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.,

பொருள்: அதிராம்பட்டினத்தில் ஆற்று மணல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் சம்பந்தமாக.

பொது நலத்துடன் செயல்படும் அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

வீட்டுக் கட்டுமானத்திற்கு தேவையான ஒரு வண்டி மணல் 500 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 800 ரூபாய் வரை இருந்து வந்தது.

 அண்மைக்காலமாக நமதூரில் 2000 முதல் 2500 வரை விற்பனையாகி வருவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பார்க்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்தினர், நிர்பந்தத்தில் வீடு கட்டுபவர்கள் என பெரும்பாலான மக்களுக்கு இச்சுமையை சுமக்க முடியாததால் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏன் இந்த திடீர் விலையேற்றம் என விசாரித்தபோது மணல் கொண்டு வரும் வண்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே அனுமதி என்றும் ஒரு வண்டிக்கு 110 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது. அவர்கள் 110 ரூபாய் செலுத்துவதாலும் மறுநாள் வரை சும்மாவே இருப்பதாலும் நம் மக்களிடம் வசூல் செய்வதாகவும் தகவல் வருகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நம் மக்கள் ஏமாற்றி சுரண்டப்படுவதை நாம் கண்டு கொள்ளாமல் அனுமதிக்கும் குற்றத்திற்கு ஆளாகிறோம்.

கொரோனா பேரிடரால் உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து இடங்களிலும் பொருளாதார தட்டுப்பாடு மிகவும் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் மிகவும் சிரமத்திலேயே உள்ளனர். இச்சூழ்நிலையில் விலையேற்றம் கொடுமையானது. இவ்விலையேற்றம் கட்டுப்படுத்தப்படக்கூடியதே. சுமார் ஒரு மாதம் கட்டுமான பணிகளை தவிர்த்தாலே கட்டுக்குள் வந்துவிடும்.

 லாக்டவுன் ஆரம்ப நிலையில் இவ்வாறு கட்டுமான பணிகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதை அனைவரும் பொருத்துக்கொண்டவர்கள் தான்.

ஆனால் தற்போது ஒருசில செல்வந்தர்களால் பணம் அலட்சியம் செய்யப்பட்டு மணல் வாங்கப்படுவதால் இந்த விலையேற்றம் உருவாக்கப்படுகிறது.
இது வெறுக்கத்தக்க கூடாத செயலாகும். ஹராம் ஆகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள், ஒருவர் வியாபாரம் செய்து கொண்டு இருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அறிவித்தார்கள். புஹாரி 2165.

ஒருவர் வியாபரம் செய்துகொண்டு இருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது பொருளின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும். எனவே இதுபோன்று விலையேற்றுவது ஹராமாகும். தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இது விஷயத்தில் உடனடி தீர்வு காணுங்கள்.

கட்டுமான ஒப்பந்த தாரர்களாலும் இவ்விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியும். அவர்களுக்கும் சமூக பொருப்பு உண்டு. ஆனால் வீட்டின் உரிமையாளர் செலவு செய்ய தயாராக இருந்தால் நமக்கு வருமானமே என்ற சுயநலம் கலந்திடாமல் தன்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு தினசரி கொடுக்கப்படும் சம்பளத்திற்கு பயனாகிடும் என சிந்தித்திடாமல்., சமூக அக்கரையோடு தீர்க்கமான முடிவை அவர்களாலும் தரமுடியும்.

உடனடி தீர்வாக சில நாட்களுக்கு வேலையை நிறுத்தி வைத்தாலே சுமூக தீர்வு கிடைக்கும். பக்கத்து கிராமத்தார்கள் அவர்களுக்குள் கட்டுப்பாடு விதித்து அப்பஞ்சாயத்தார்களே மணலுக்கு விலை நிர்ணயித்து இருப்பது நல்ல உதாரணமாகும்.

எனவே அனைத்து மஹல்லா தலைவர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய இயக்கத்தினர் ஆகியோர் ஒன்று கூடி தீர்வு காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எனது பரிந்துரையாக சில நாட்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தி வைக்க அறிவிப்பதோடு வீடு கட்டும் செல்வந்தர்களிடம் தனியாக சந்தித்து வீடு கட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என கோரிக்கை வைக்கலாம்.

இப்படிக்கு.,
           
  N. முகமது மாலிக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.