Latest News

மக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தைக் குறைத்துவிடக்கூடாது: மக்களவைத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தையும் பல்வேறு விஷயங்களை எழுப்பும் அதிகாரத்தையும் குறைத்துவிடக்கூடாது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. கரோனா காலத்தில் எம்.பி.க்களிடையே சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கிலும், பல்வேறு மருத்துவக் கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கரோனா காலத்தைக் காரணம் காட்டி, கேள்வி நேரத்தையும், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தையும் குறைப்பது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் நலனுக்கானதாக இருக்காது.

எம்.பி.க்கள் தாக்கல் செய்துள்ள நோட்டீஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தைக் குறைத்து, கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தைக் குறைக்கும் திட்டம் இருப்பதாக அறிகிறோம்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொதுநலன் சார்ந்த முக்கிய விஷயங்களில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் கேள்வி எழுப்பிப் பேசுவது, எம்.பி.க்களுக்கு கிடைக்கக் கூடிய நடைமுறையில் மிகவும் முக்கியமானவை.

இந்தச் சூழலில் கேள்வி நேரத்தையும், கேள்விக்குப் பிந்தைய நேரத்தையும் குறைத்து, எடுத்துப் பேசக்கூடிய விவகாரங்கள் எண்ணிக்கையையும் குறைத்து, நேரக்கெடு வைப்பது என்பது எம்.பி.க்களின் நலனுக்கானதுஅல்ல.

ஆதலால், மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எந்தவிதமான நேரக்குறைப்பும் இன்றி, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிப் பிரச்சினை, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பிப் பேசுவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமான கூட்டத்தொடரில் என்ன நடைமுறை இருக்குமோ அதை அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.