
புதுச்சேரியில் இன்று (ஆக.15) ஒரே நாளில் புதிதாக 369 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, ''புதுச்சேரியில் 1,089 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 317 பேர், காரைக்காலில் 52 பேர் என 369 பேருக்கு (33.88 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 7,355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,060 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 61 பேர் என 1,172 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,591 பேர், காரைக்காலில் 168 பேர், ஏனாமில் 91 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,025 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று புதுச்சேரியில் 147 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 59 பேர் என மொத்தம் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,224 (57.33 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 53 ஆயிரத்து 503 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 44 ஆயிரத்து 714 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 887 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது'' எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 1,483 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே, பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தேவையின்றி வெளியே நடமாடக் கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment