
ஆர்கே பேட்டை அருகே கூலி வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது சாலையோரம் இருந்த பாழடைந்த கிணற்றில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை எடுத்து நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்னாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது மகன் சந்தோஷ்17, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சத்யா 14, மற்றும் ஐயப்பன் மகன் விஜயகுமார் 17, ஆகிய 3 பேரும் அம்மையார்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்கு சென்று மதியம் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது கிராம சாலை அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் புதர் மண்டிக்கிடந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருசக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சத்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விஜயகுமார் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்த தகவல் இருந்த ஆர்கே பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார், உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன், சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்த இரண்டு மாணவர்கள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வறுமை காரணமாக ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது சாலையோரம் இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment