மதுரை: யாசகம் பெற்று, 10வது முறையாக, ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி
வழங்கிய முதியவருக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 1 லட்சம்
ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம்,
ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில
மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை
கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை
குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி
பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு,
மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள்
வழங்கியுள்ளார்.இவர், மே முதல் யாசகம் பெற்று சேமித்த பணம் தலா, 10 ஆயிரம்
ரூபாய் வீதம் 9 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக
வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று பத்தாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை,
கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். கொரோனா நிதியாக இதுவரை ரூ.1 லட்சம்
வழங்கிய அவரை பலரும் பாராட்டினர்.முன்னதாக, சுதந்திர தின விழாவில், பூல்
பாண்டியனுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை
கண்டுபிடிக்க முடியாததால், அன்று விருது வழங்க முடியவில்லை. இத்தகவல்
தெரிந்து, கலெக்டர் அலுவலகம் வந்த பூல் பாண்டியனுக்கு, கலெக்டர் விருது,
சான்றிதழ் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment