Latest News

  

12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி - தாய்மொழிக் கல்வி - மும்மொழி கொள்கை - 3, 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு

நாட்டின் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டில் அளித்த வரைவு கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்ற அம்சங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள்:

5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். இதனை 8-ம் வகுப்பு வரை நீட்டித்துக் கொள்ளலாம்.

6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். 3 மற்றும் 5- ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும்.மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும்

தற்போது பின்பற்றப்படும் 10+2 என்ற பள்ளி வகுப்பு முறைக்குப் பதிலாக 5+3+3+4 என்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.

முதல் 5 ஆண்டுகள் அடிப்படைக் கல்வியாக இருக்கும். இதில், மூன்று ஆண்டுகள் தொடக்கக்கல்விக்கு முந்தைய படிப்பு, முதல் மற்றும் இரண்டு வகுப்பு ஆகியவை இடம்பெறும்.

இரண்டாவது கட்டத்தில் 3 முதல் 5 வரையான வகுப்புகளும், நடுநிலையில் 6 முதல் 8 வகுப்புகளும், உயர்நிலைக் கல்வியாக 9 முதல் 12 வரையான வகுப்புகளும் இருக்கும் என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத் தேர்வுகள் மாணவர்களின் கற்கும் திறனை மட்டும் பார்க்காமல், மாணவர்களின் புலமையை கண்டறியும் வகையில் அமையும்.

3 முதல் 18 வயதுவரையான மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் பொருந்தும். இதன்படி, 12-ம் வகுப்பு வரை இலவச, கட்டாயக் கல்வி வழங்கப்படும். பள்ளிக் கல்வியில் பாடசுமை குறைக்கப்படும்.

தற்போது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட விதிகள் உள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும்.

இதன்மூலம், எந்தக் கல்வி நிறுவனமும் வரையறுக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.

சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படும்.

இளநிலைப் படிப்பு 3 அல்லது 4 ஆண்டு காலத்துக்கு இருக்கும். இதில், சான்றிதழ்களுடன் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் வெளியேறிக் கொள்ளலாம். முதுநிலைப் படிப்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலத்துக்கு இருக்கும்.

ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.

எம்.பில் பாடத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இணைக்கப்பட்ட கல்லூரிகள் என்ற முறை 15 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

அனைத்து வகையான கல்லூரிகளிலும் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் கலந்துகொள்வது கட்டாயமில்லை என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.