Latest News

சிப்பிகுளத்தில் கடல் விரால் மீன்கள் அறுவடை: ஊரடங்கு உத்தரவால் குறைந்த விலைக்கு விற்பனை

தூத்துக்குடி மாவட்டம் கோசில்பட்டியில் உள்ள சிப்பிகுளம் கடலில் மிதவை கூண்டுகளில் வளர்க்கப்படும் கடல் விரால் மீன்கள் அறுவடை நடந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாகக் குறைந்து விலைக்கு மீனவர்கள் விற்பனை செய்தனர்.

தமிழகத்தில் கடலில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மாற்றுத்தொழிலாக கடலிலேயே மீன் வளர்க்கும் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் இந்த திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சிப்பிகுளம் கடலில் உலக வங்கி நிதியுதவியுடன் 5-ம், தனியார்கள் சார்பில் 12 மிதவை கூண்டுகள் உள்ளன. இதில், மீனவர்கள் ராயப்பன், ரெக்சன் ஆகியோருக்கு சொந்தமான மிதவை கூண்டில் கடந்த ஜூன் மாதம் கடல் விரால் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன.

இதற்கு காலை, மாலை நேரங்களில் மீனவர்கள் வல்லத்தில் கடலுக்குள் சென்று மிதவை கூண்டில் உள்ள கடல் விரால் மீன்களுக்கு, கழிவு மீன்களை உணவாக அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடல் விரால் மீன்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வள பல்கலைக்கழகம், கடல் விரால் மீன்களை அறுவடை செய்ய அறிவுறுத்தியது. இதையடுத்து

இன்று கடல் விரால் மீன்கள் அறுவடை நடந்தது. இதில் 700 கிலோ வரை அறுவடை செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து மீனவர் ஆர்.ரெக்சான் கூறும்போது, தூத்துக்குடிக்கு முன் பகுதியான சிப்பிகுளம், வைப்பாறு ஆறு வரையிலான கடல் அமைதியாகவும், தேவையான நீரோட்டத்துடன் காணப்படும்.

இது மிதவை கூண்டில் மீன்கள் வளர்ப்பு ஏதுவாக இருக்கிறது. நாங்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மிதவை கூண்டு முறையில் கடல் விரால், சிங்கி இறால், கொடுவா, நிக்கோபியா போன்ற மீன்கள் வளர்த்து வருகிறோம்.

கடந்த ஜூன் மாதம் 295 மீன் குஞ்சுகளை விட்டு பராமரித்து வந்தோம். மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்து மீன் குஞ்சுகள் விடப்பட்டதில் இருந்து சுமார் ஒரு மாதம் வரை அதனை கண்காணித்து, மீன்களின் வளர்ச்சியை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர்.
வழக்கமாக ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடல் விரால் மீன்கள் அறுவடை நடைபெறும். ஆனால், இந்தாண்டு ஊரடங்கு காரணமாக கடல் விரால் மீன்களுக்கு சரியாக உணவு அளிக்க முடியவில்லை.
இதையடுத்து மீன்வள பல்கலைக்கழகத்தின் அறுவுறுத்தலின்படி காவல்துறையின் பாதுகாப்புடன் கடல் விரால் மீன்களை அறுவடை செய்தோம். நாங்கள் விட்ட 295 குஞ்சுகளில் ஒன்று கூட இழப்பு இல்லாமல் அப்படியே எங்களுக்கு கிடைத்துவிட்டது. ஒரு மீன்னின் எடை 2 கிலோவில் இருந்து 4.5 கிலோ வரை உள்ளது.

தற்போது மீன்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனால், சரிவர கொண்டு சேர்க்க முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு தொடர்பாக அரசின் உத்தரவு தெளிவாக இருந்தும், ஓட்டுநர்கள் வேன்களை இயக்க தயாராக இல்லை.
கடந்த ஆண்டு கிலோ ரூ.450 வரை விற்பனையானது. ஆனால், இந்தாண்டு உணவளிக்க முடியாத சூழல் காரணமாக நாங்களே வியாபாரிகளை நாடிச்சென்று ஒரு கிலோ ரூ.340 என குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

இதற்கு மும்பை, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் கடல் விரால் மீன்களுக்கு நிரந்தரமாக வரவேற்பு உள்ளது. வியாபாரிகள் சிங்கப்பூர், அரபு நாடுகள் ஏற்றுமதியும் செய்கின்றனர். அடுத்த ஆண்டு கடல் விரால் மீன்கள் எங்களுக்கு கண்டிப்பாக கைகொடுக்கும், என்றார் அவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.