Latest News

சிஏஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்; 2 கோடி கையெழுத்துகள் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைப்பு

சிஏஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் மூலம் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத்தலைவரிடம் மக்களவை உறுப்பினர்கள் ஒப்படைத்தனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் இயக்கம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 

இதில் சுமார் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்து சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து குடியரசுத் த‌லைவர் மாளிகைக்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில்,‌ வைகோ, சு.வெங்கடேசன், திருமாவளவன், டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை‌ இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. குடியரசுத்தலைவரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதமும் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.