Latest News

  

மதுரை கே.கே.நகரில் திடீரென நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை: மாலை, மரியாதை என தினமும் திரளும் அதிமுகவினர்; மிரளும் வாகன ஓட்டிகள்

மதுரை கே.கே.நகரில் திடீரென நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை: மாலை, மரியாதை என தினமும் திரளும் அதிமுகவினர்; மிரளும் வாகன ஓட்டிகள்
படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை
மதுரை கே.கே.நகரில் புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினர், தினமும் காரணமே இல்லாமல் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். 

மதுரை மாட்டுத்தாவணி செல்லும் மேலூர் சாலையில் கே.கே.நகர் ரவுண்டானா முன்பு எம்ஜிஆர் சிலை மட்டுமே இருந்தது. அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவு நாள், பிறந்த நாள் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுக தொடக்கவிழா, தேர்தல் வெற்றி நிகழ்ச்சிகளில் இந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். 

அந்த நாட்களில் ஒட்டுமொத்த அதிமுகவினரும் கே.கே.நகர் ரவுண்டானா எம்ஜிஆர் சிலை அருகே குவிந்துவிடுவார்கள். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை கடக்க பெரும் சிரமம் அடைவார்கள். போலீஸாராலே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாத அளவிற்கு அந்த இடமே அதிமுகவினர் அதிகாரத்திற்குள் வந்துவிடும். வாகன ஓட்டிகளும், அன்று ஒரு நாள்தானே என்று அனைத்தையும் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வார்கள்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் ஜெயலலிதா நினைவு நாளில் கே.கே.நகர் எம்ஜிஆர் சிலை இருந்த பகுதியில் அந்த சிலையை அகற்றிவிட்டு அதே இடத்தில் அவசரம் அவசரமாக மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெறாமலேயே புதிதாக எம்ஜிஆர்_ஜெயலலிதா சிலையை வைத்தனர்.

உச்சநீதிமன்றம், புதிதாக தலைவர்கள் சிலைகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி அதிமுவினர் அந்த சிலையை அந்த இடத்தில் புதிதாக நிறுவினர். மாவட்ட நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது தினமும் அதிமுகவினர், ஒவ்வொரு வட்டம் வாரியாக காரணமே இல்லாமல் ஊர்வலமாக திரண்டு வந்து, கே.கே.நகர் ரவுண்டானா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மாலை அணிவிக்க வரும்போது, அவர்கள், ரவுண்டான பகுதியில் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு நின்று கோஷமிடுவதும், சாலையோர ரவுண்டானா திண்டுகளில் அமர்ந்து கொள்வதுமாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.

மாட்டுத்தாவணி பஸ்நிலையம் மற்றும் நகர்பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள், கே.கே.நகர் ரவுண்டான சிலையை கடந்து செல்லமுடியாமல் தினமும் சிரமப்படுகின்றனர்.

சாலையோரமாக செல்வதற்கு சாதாரண பள்ளி, கல்லூரி ஊர்வலம், சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷில் முன் அனுமதி பெற வேண்டும். அவர்கள் அனுமதியளித்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்த முடியும். மீறி நடத்தினால் அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்வார்கள்.

ஆனால், தற்போது எந்த அனுமதியும் இல்லாமல் அதிமுகவினர், கே.கே.நகர் ரவுண்டான பகுதியில் புதிதாக சிலையும் வைக்கின்றனர். எந்த அனுமதியும் பெறாமல் ஊர்வலமாக வந்து சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலையும் அணிவிக்கின்றனர்.

காரணமே இல்லாமல் தினமும் வந்து மாலை அணிவிப்பதின் ரகசியம் குறித்து அதிமுவினர் சிலரிடம் பேசியபோது, ''மாநகராட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வார்டு வாரியாக கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு மாநகரத்தில் நடக்கிறது. அதனால், தேர்தல் முடியும் வரை, ஒரிரு நாளுக்கு ஒரு முறை வட்டம் வாரியாக வந்து கே.கே.நகர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சொல்லி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உத்தரவிட்டுள்ளார். அதனாலே தினமும் கட்சியினர் வந்து மாலை அணிவிக்கின்றனர், '' என்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.