Latest News

  

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஆன்லைனில் குடியுரிமை: மத்திய அரசு திட்டம்; மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அனைத்து விதமான நடைமுறைகளையும் ஆன்லைனில் நடத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மாநிலங்களைப் புறக்கணித்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. கேரள மாநில அரசுகூட இன்று சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போதுள்ள நடைமுறையின் கீழ் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு வரும் விண்ணப்பங்கள் மாஜிஸ்திரேட் மூலமே பரிசீலிக்கப்பட உள்ளது. ஆனால், அதைச் செயல்படுத்த ஒருசில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அந்த முறையை நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசீலிக்கும் முறைக்குப் பதிலாக புதிய அதிகாரியை நியமித்து அவர் மூலம் பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதன்படி, விண்ணப்பம் தொடர்பான அனைத்து விதமான பரிசீலனைகள், ஆய்வுகள் அனைத்தும் ஆன்லைனில் முடிந்து, ஆன்லைனிலேயே குடியுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

குடியுரிமை பெறுவதில் அனைத்து விதமான முறைகளையும் ஆன்லைன் மூலம் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் தலையீடு எந்த இடத்திலும் இருக்க வாய்ப்பு இருக்காது.

உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூற்றுப்படி, " குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவதற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஏனென்றால் இந்தத் திட்டம் அரசியலமைப்பின் 7-வது பட்டியலில் மத்திய அரசின் பட்டியலுக்குள் வந்துவிடும்.

ஆதலால், மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறுவதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரமில்லை. மத்திய அரசுப் பட்டியலில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரம், ரயில்வே, குடியுரிமை உள்ளிட்ட 97 பிரிவுகள் அடங்கியுள்ளன. இந்தப் பிரிவுகளில் சட்டம் இயற்றும்போது அதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது" எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தால் குடியுரிமை வழங்கப்படும் என்ற நிலையை மத்திய அரசு 5 ஆண்டுகள் தங்கி இருந்தாலே குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்தது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.