இந்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,
இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட
வன்முறையில், குறைந்தது மூன்று பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும்,
சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ஏஎன்ஐ முகமை செய்தி
வெளியிட்டுள்ளது.
டெல்லியின் தெற்கு
பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா
இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக
கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக
போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை
வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்தேறிய, தெற்கு டெல்லியில் உள்ள நியூ
பிரெண்ட்ஸ் காலனியை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக்காக காவல்துறையினர்
குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, டேராடூன், அசாம், மேற்குவங்காளம்
உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த
மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் - காவல்துறை இடையே மோதல்
டெல்லியில்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
ஒருகட்டத்தில் வன்முறையாக மாறத் தொடங்கியதும், அங்கு குவிக்கப்பட்டிருந்த
காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்
போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
அப்போது, சில மாணவர்கள்
கல்வீச்சில் ஈடுபட்டதில், காவல்துறையை சேர்ந்த ஆறு பேர் காயமடைந்ததாக
தென்கிழக்கு டெல்லியின் காவல்துறை கண்காணிப்பாளர் சின்மோய் பிஸ்வால்
கூறுகிறார்.
"வன்முறையில் ஈடுபட்ட கும்பலை அப்புறப்படுத்தி அதன்
மூலம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதே எங்களது நோக்கம். எங்களுக்கும் ஜாமியா
மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எவ்வித பிரச்சனையும்
இல்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
மேலும், இந்த போராட்டத்தில்
ஈடுபட்டவர்களை நோக்கி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தவறான தகவல்
பரப்பப்படுவதாக சின்மோய் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை
காவல்துறை கைதுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,
டெல்லி காவல்துறையினர் எவ்வித முன்னனுமதியும் இல்லாமல் தங்களது
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததாக அதன் நிர்வாகி வாசிம் அஹ்மத் கான்
என்பவர் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
"காவல்துறையினர்
வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள்
நுழைவதற்கு அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்களது
ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டு வளாகத்தை விட்டு வெளியேற
நிர்பந்திக்கப்படுகிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த
சூழ்நிலையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள
சுக்தேவ் விஹார், ஓக்லா, ஆர்.கே. புரம், முனிர்கா உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ
ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,
"டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு துணைநிலை ஆளுநரிடம்
வலியுறுத்தியுள்ளேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் ஆன அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க
வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
'புதிய காஷ்மீர்'
இந்நிலையில்,
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த
தலைவர்களில் ஒருவரான அதிர் ரஞ்சன் சௌத்திரி, நாட்டின் புதிய காஷ்மீராக
அசாம் உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
"ஒட்டுமொத்த வடகிழக்கு
இந்தியாவும், குறிப்பாக அசாம் முழுவதும் வன்முறை களமாக மாறியுள்ளது
நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. ஒருபுறம், காஷ்மீரிலும் மற்றொருபுறம்
புதிய காஷ்மீரான அசாமிலும் நிலவி வரும் சூழ்நிலை மிகுந்த கவலையை
ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி
வெளியிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து
மேற்குவங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் போராட்டங்களில்
இறங்கியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
இந்நிலையில், குடியுரிமை
சட்டத் திருத்த மசோதாவை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப்போவதில்லை என
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்துள்ளது குறித்து கருத்துத்
தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு சார்ந்த
இந்த முடிவில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு மாநில அரசாங்கங்களுக்கு சிறப்பு
உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று கூறினார்.
"குடியுரிமை
சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களின்
தீவிரம் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை, தங்களது
அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பயன்படுத்த முயல்கிறார்கள்; அதில் காங்கிரஸ்
கட்சிக்கு முக்கிய இடம் உண்டு" என்று அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment