Latest News

  

'தயவு செய்து சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிட வேண்டாம்' - அமலாக்கத்துறை வாதம், கிடைக்குமா ஜாமீன்?

கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்ட விதிகளை மீறி ரூ.305 கோடி அந்நிய முதலீட்டை திரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. அடுத்த நாள் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது சிபிஐ காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பானுபதி, ஏ.எஸ்.போபன்னா அமர்வு விசாரித்து வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளு படி செய்தனர்.

எனினும், அமலாக்கப் பிரிவு வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் வாதிட்டனர். இதையடுத்து கைது செய்வதற்கான தடையை நீட்டித்து விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தொடர்ந்து இன்றும் தனது வாதங்களை முன் வைத்தார்.

துஷார் மேத்தா வாதம்
எங்களிடம் உள்ள ஆதாரங்களை சிதம்பரத்திடம் கொடுத்தால் அதை அவர் உடனடியாக கலைத்துவிடுவார். அவரை கைது செய்யாமல் எங்களால் உண்மையை வரவழைக்க முடியாது. எனவே தயவு செய்து அவருக்கு முன் ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்.

சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் சலுகைகள் வழங்கினால், விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஜாகிர் நாயக் உள்ளிட்ட வங்கி மோசடி வழக்குகளுக்கு பாதகமாகும். சிதம்பரத்திடம் நாங்கள் நேர்காணல் செய்ய விரும்பவில்லை. அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க விரும்புகிறோம்.

வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுடன் வைத்து விசாரணை நடத்தவுள்ளோம். வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக சிதம்பரம் முயற்சி செய்தார், அவர் தலைமறைவாக இருந்தவர். அதனால் தான் இப்போது முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் இன்று தனது வாதத்தை முன் வைத்தது.

சிதம்பரம் தரப்பு வாதம்
இதைத் தொடர்ந்து, பதில் வாதத்தை தொடங்கிய சிதம்பரம் தரப்பு, 'சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைத்துவிடுவேன் என்றால் அனைத்து ஆதாரங்களையும் தர வேண்டாம்; ஒரே ஒரு ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டும்' என்று கோரியுள்ளது.
தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.