காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு, மற்ற நகரங்களில் இதுதொடர்பாக நடைபெறவிருந்த கூட்டங்களுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் விவாதிக்க இருப்பதாகச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில், 370 மற்றும் 35ஏ பிரிவு நீக்கப்பட்டதையொட்டி விவாதக் கூட்டம் நடத்திய, 30-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நிர்வாகத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மெட்ராஸ் பார் அசோஸியேஷன் சார்பாக, அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவு தொடர்பாகக் கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தனர். மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் அதில் பேச இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, நிகழ்ச்சி நடைபெறவிருந்த தினம் காலை, கருத்தரங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கக்கூடாது என காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருத்தரங்கத்தில் பேசவிருந்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் நம்மிடம் பேசுகையில், “ஒரு சட்ட அமர்வில் சட்டத்தைப் பற்றி விவாதிக்காமல் வேறு எங்கு விவாதிக்க முடியும்? நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவன் இல்லை. எந்தவொரு கட்சியைக் குறிப்பிட்டும் நான் பேசவில்லை. காஷ்மீர் மசோதாவை நிறைவேற்றியது தொடர்பாக உள்ள அரசியலமைப்பு சட்டச் சிக்கல்களைத்தான் பேசவிருந்தேன். மெட்ராஸ் பார் அசோஸியேஷன் சார்பான ஒரு அகாடமி ஃபோரம்தான் இது.

இதன் முதல் நிகழ்ச்சியை தலைமை நீதிபதி வந்து தொடங்கிவைத்தார். இரண்டாவது நிகழ்ச்சியில் பேச, என்னிடம் கேட்டபோது நான் ஒப்புக்கொண்டேன். பா.ஜ.க-வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் எதுவும் கிடையாது. வெகுசிலரே எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதற்காக வேறு யாரையும் கலந்தாலோசிக்காமலேயே, இறுதி நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர். வேறு மாநிலத்தில் இது நடந்திருந்தால் பொருட்டில்லை. ஆனால், தமிழகத்தில் இது நடப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.
மேலும் அவர், “கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது முட்டாள்தனம். பேச்சு சுதந்திரம் என்பதில் என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு கருத்தை நான் அணுகுவதற்கான உரிமையும் அதில் அடங்கும்.

'இந்திய அரசியலமைப்பை கா?ஷ்மீரில் முழுமையாக நிறைவேற்றிவிட்டோம்' என்கிறார்கள். ஆனால், அதே அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்காமல், காஷ்மீரில் ஏன் இத்தனை கட்டுப்பாடுகளைத் திணித்துள்ளனர்” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், “கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது முட்டாள்தனம். பேச்சு சுதந்திரம் என்பதில் என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு கருத்தை நான் அணுகுவதற்கான உரிமையும் அதில் அடங்கும்.

வழக்கறிஞர்களே ஒரு நீதிமன்ற வளாகத்தில்கூட அரசியலமைப்பைப் பற்றி விவாதிக்க முடியாது என்றால், ஜனநாயகம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? இது, மறைந்த முன்னாள் பிரதமர் கொண்டுவந்த இந்திரா காந்தியின் எமர்ஜென்சியைவிட மோசமான போக்கு. அறிவிக்கப்படாத நெருக்கடிநிலைபோல உள்ளது. இதை காங்கிரஸோ, பி.ஜே.பி-யோ வேறு எந்த அரசியல் கட்சிகளோ செய்திருந்தாலும் தவறுதான். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை என்பது என்னுடைய விமர்சனம்” என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த குமரகுரு பேசுகையில், "அவர், ஊடகங்களிலேயே எதிர்மறையான கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். மீண்டும் அகாடமிக் தளத்தில் அதே கருத்துகளைத் தெரிவிக்க அனுமதிக்கக்கூடாது. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளைப் பற்றி விவாதிக்கக்கூடாது. அப்படியென்றால், விசாரணையில் மீதமுள்ள விஷயங்களைப் பற்றிப் பேச எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும் பேசுவதற்கான அரசியல் மேடை இது கிடையாது” என்றார்.


No comments:
Post a Comment