Latest News

என்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்


வேலூர் தேர்தல் தோல்வி குறித்து ஏசி சண்முகம் கருத்து சொல்லி உள்ளார்

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில் தாம் தோல்வியை சந்தித்ததற்கு காரணம் பாஜகதான் என்று ஏசி சண்முகம் மறைமுகமாக சொல்லி இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் ஏசி சண்முகம் பேசியபோது சொன்னதாவது:

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இருக்கிறது. ஆளும்கட்சியான பாஜகவுடன் நெருக்கமாக உள்ள எனக்கு வாக்களித்தால் மட்டும்தான் இந்த தொகுதிக்கு நல்லது செய்ய முடியும். தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அளித்த வாக்குகள் எல்லாம் வீணாக போய்விட்டன. இந்தத் தொகுதியில் உங்கள் வாக்குகளை வீணாக்கிடாதீங்க.. தேசியத் தலைவர்கள் எனக்காக பிரசாரம் செய்ய வருவாங்க.. பிரதமரும் வருவார்" என்றார்.

விசுவாசம்
பாஜக மீதான மொத்த விசுவாசத்தையும் காட்டி ஏசி சண்முகம் அன்று பேசியிருந்தார். ஆனால் இறுதியில் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் தோற்றார். பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமிய சமூக வாக்குகள் திமுகவுக்கே கிடைத்தது.

பேட்டி
இந்நிலையில், பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லி சொல்லியே ஓட்டு கேட்ட ஏசிஎஸ்.. இப்போது அதே பாஜகவை கடுமையாக சாடி உள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது அவர் சொன்னதாவது:
அதிருப்தி
"என்ஐஏ சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம், 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தி மட்டும் இல்லாவிட்டால், நான் நிச்சயம் 15,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். இந்த அதிருப்தியால்தான் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர்.

சமாதானம்
வாக்குப் பதிவைப் புறக்கணிக்கும் நிலையில்தான் இஸ்லாமியப் பெருமக்கள் இருந்தனர். ஆனால் திமுக தரப்பில் அவர்களை சமாதானப்படுத்தி தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்து விட்டனர். இதனால்தான் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து விட்டன. இதனால்தான் நான் தோல்வி அடைய நேரிட்டது. தோற்றாலும் கூட வேலூர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்" என்றார்.

ஏசிஎஸ்
தோல்வியை தழுவினாலும் ஏசிஎஸ்-ன் இந்த பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 2-வது இடம், மே மாத தேர்தலில் போட்டியிடவே முடியாமல் முட்டுக்கட்டை.. இப்போது போட்டியிடும் நூலிழையில் தோல்வி.. என மொத்தமாக நொறுங்கி போய் உள்ளார் ஏசி சண்முகம்.



No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.