
பெரும் சோகம், அதிர்ச்சி... அமெரிக்காவிற்கு அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய போது தந்தையும், அவரது சட்டைக்குள் உடல் புதைத்து, கழுத்தை பற்றியபடி குழந்தையும் பிணமாக கரை ஒதுங்கிய புகைப்படம் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.
மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைவோரை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் பிரம்மாண்டமான சுவரை டிரம்ப் அரசு கட்டியுள்ளது. இதனால் பிற நாட்டினர் சட்டவிரோத வழிகளில் அமெரிக்காவில் நுழைய முயற்சிக்கின்றனர்.
எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற 2 வயது நிரம்பாத மகள் உள்ளார். 3 பேரும் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சம் அடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு ஜூன் 23 வந்தனர்.
அங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டிருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு காத்திருக்க விரும்பாத அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவிற்கு எளிதாக சென்றுவிடலாம் என கருதியுள்ளனர்.மெக்சிகோ பகுதியில் ஆறு அமைதியாக இருந்தது. இதனால் மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் நுழைத்து சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார்.
அவரை தொடர்ந்து மனைவி அவோலியா நீச்சலடித்தார். ஆனால் இடையிலேயே ஆற்றில் சீற்றம் அதிகரித்தது. இதைப்பார்த்த அவோலியா தனது கணவரையும் குழந்தையையும் மெக்சிகோ கரைக்கு திரும்பிவிடுமாறு அழைத்தார். ஆனால் அதற்குள் ஆற்றின் சீற்றம் அதிகரித்து இருவரையும் இழுத்துச்சென்றது.
அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார்.அங்கு அவர் தனது கணவரையும் குழந்தையும் தண்ணீர் அடித்துச்சென்ற தகவலை கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கவிடப்பட்டது.
இந்நிலையில் மார்ட்டின்சும், அவரது சட்டைக்குள் உடல் புதைந்தபடி மகள் வலேரியாவும் சடலமாக கரை ஒதுங்கினர். இந்த புகைப்படம் மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2015 ல் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரில் இருந்து உயிர்பிழைக்க தப்பிச் சென்ற போது மத்தியதரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் அய்லான் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் பலர், எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment