Latest News

டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி

தலைநகர் டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி டெல்லியில் உள்ள ஊடகங்கள் பலவும், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அதுவும் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியின் பல்வேறு பகுதிகளில், ஒர நாளில் 9 கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது மக்களை பீதிக்குள்ளாக்கியது. இதனையடுத்து டெல்லியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவகாரத்தை, அரசியல் கட்சிகள் தற்போது கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வர் கெஜ்ரிவால், கொடூர குற்றச்செயல்கள் தலைநகரில் அதிகரித்துள்ளதால் நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கு டெல்லி காவல்துறை, துணை நிலை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றின் மீது கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலையை மேம்படுத்த, ஒருங்கிணைந்து செயலாற்ற மாநில அரசு விரும்புகிறது.

டெல்லியின் முக்கிய பகுதிகள் அனைத்துமே சிசிவிடி வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இது குற்றங்களை குறைக்க வெகுவாக உதவும். பெருகி வரும் குற்றங்களை குறைக்க, பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் டெல்லி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு டெல்லி போலீஸாரும் காரணம் என்ற கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை, காவல்துறை மறுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கொடூர குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

மேலும் கெஜ்ரிவால் தற்போது கோடிட்டு காட்டியுள்ள கொலை சம்பங்களில், அவர்களது வீட்டில் வசித்து வந்தவர்களே தகராறு காரணமாக கொலை செய்துள்ளனரே தவிர, ரவுடிகளோ, சமூக விரோதிகளோ இல்லை என போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஆம் ஆத்மி, கடந்த ஒரு மாதத்தில் 220 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளது. சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்களால், டெல்லியின் பெருமையானது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.

இரவு 8 மணிக்கு பிறகு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொள்ளை கும்பல்கள் மீது 220 முறை நகரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றசம்பவங்களுக்கு டெல்லி போலீஸார், கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் போன்றவை தான் பொறுப்பு என மீண்டும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.