
ஸ்ரீபெரும்புதூர்:
மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே, முதல் பணியாக
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்
மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை
ஆதரித்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில்
ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

டிஆர் பாலுவுக்கு பாராட்டு
"கருணாநிதி
எழுதிய தொடரான ஸ்ரீராமானுஜர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர். கருணாநிதி
இருந்திருந்தால் ஸ்ரீபெரும்புதூர் மக்களிடம் ஆதரவு கேட்டு அவரே
பிரச்சாரத்திற்கு வந்திருப்பார். நாளை மாலை மத்திய சென்னையில் 40வது தொகுதி
தேர்தல் பிரச்சாரத்தை நான் நிறைவு செய்கிறேன். இந்த தொகுதி வேட்பாளர்
டி.ஆர்.பாலு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல தேசிய நெடுஞ்சாலை
திட்டங்களை செயல்படுத்தியவர். கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்.
கருணாநிதியின் தம்பிகளில் ஒருவராக பாலு திகழ்கிறார்.

முதல் வேலை சேது திட்டம்
காங்கிரஸ்
திமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த உடன், முதல் பணியாக சேது சமுத்திர
திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சூயஸ்
கால்வாய் போல், பனாமா கால்வாய் போல் சிறப்பான திட்டமாக இருக்கும். நமது
கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.மிகப்பெரிய
தொழில் வளர்ச்சி ஏற்படும். இந்த திட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி உள்பட 5
துறைமுகங்கள் பயன்பெறும்.

கருணாநிதி சாதனை
மிகவும்
பின்தங்கிய பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலைகள் உருவாக காரணமாக இருந்தவர்
கருணாநிதி. ஸ்ரீபெரும்புதூர் உள்பட சென்னை வெளியே உள்ள தொழிற்சாலைகளை
கொண்டுவந்தவர் கருணாநிதி. கூட்டுறவுத்துறையை முதன்முதலில்
அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதா கூறிய 40 சதவீதம் தொழில்
முதலீடுகள் தமிழகத்துக்கு வரவில்லை. அதிமுக ஆட்சியில் 8 வருடங்களாக எந்த
திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

15லட்சம் பணம்
பிரதமர்
மோடி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டுவருவேன் என்று கூறினார்.
அதையும் தாண்டி, கருப்பு பணத்தை எடுத்து தலா ரூ.15லட்சத்தை ஒவ்வொரு
இந்தியரின் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னபடி
செய்தாரா, 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொன்னாரே அதை செய்தாரா?
மோடி அளித்தது எல்லாம் பொய்யான வாக்குறுதிகள். எதையும் நிறைவேற்றவில்லை.

8 வருட ஆட்சியில்
கோமாளியைப்
போல் ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி. வாய்க்கு வந்தபடிஎல்லாம் பேசுகிறார், எதையும் சொல்லமுடியாததால்
அவர் அப்படி பேசுகிறார். இன்னும் திமுகதான் ஆட்சியில் இருப்பது போல்
விமர்சனம் செய்த வருகிறார். ஜெயலலிதா பொறுப்புக்கு வந்து அதன்பின் எடப்பாடி
பொறுப்புக்கு வந்த 8 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 8 வருடத்தில் என்ன
செய்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள்..

அதிமுக ஏமாற்றுகிறது
கருணாநிதி
முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட்
தேர்வை நிறைவேற்றும் என யாரை ஏமாற்ற தேர்தல் அறிக்கையில் அதிமுக
குறிப்பிட்டுள்ளது. 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின்
தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டும். ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த
முதல்வர் பழனிச்சாமி தீவிரமாக இருந்தார்" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

No comments:
Post a Comment