
ஒரே நேரத்தில் அதிமுக, திமுக கட்சிகளுடன் பேசி தொண்டர்களின் உழைப்பை,
ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள்.. இனியாவது உங்களை
நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள்.. உங்கள் நடிப்பை
நம்பி ஏமாற தயாராய் இல்லை" என்று தேமுதிக நிர்வாகி ஒருவர் விஜயகாந்த்துக்கு
பரபரப்பான ராஜினாமா கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்.
விஜயகாந்த் சென்னை வந்ததில் இருந்தே அரசியல் பரபரப்பு ஆரம்பமானது. அதிலும்
கடந்த 2 நாளாக இது இன்னும் அதிகமாகிவிட்டது.
கூட்டணி என்று மறுபுறம், கூட்டணி வேண்டாம் என்று மறுபுறம் தேமுதிக
நிர்வாகிகள் வலிறுத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே
முக்கிய நிர்வாகி ஒருவர் ராஜினாமா என்ற செய்தி வெளியாகி உள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்த்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா.
இவர் விஜயகாந்துக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர்
சொல்லி இருப்பதாவது:
வெட்கப்படுகிறேன்
உங்களின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான
ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் கொள்கையை நல்லது என நம்பி கடந்த
1999-ல் ரசிகர் மன்றத்தில் துவக்கி நேற்று வரை உங்களுடன் பயணித்ததை எண்ணி
வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.
உழைப்பு
அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என அடிக்கடி கூறுவீர்கள்.
நேற்று உங்களின் உழைப்பை பார்த்த போது நீங்களும் ஒரு சராரி அரசியல்
வியாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் அதிமுக., திமுக
கட்சிகளுடன் பேசி லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல
விலைக்கு விற்க முயற்சித்தீர்கள். தொண்டர்களுக்கு நல்ல மதிப்பு
கொடுத்தீர்கள்.
உடல் நலம்
உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு
நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.பொது வாழ்வில் தொண்டனின் நலம்,
தமிழகத்தின் நலம் முன்னெடுத்து செல்ல வேண்டும். உங்களின் பொது வாழ்வு பதவி
ஆசை என்ற நிலையில் உள்ளது. இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்து
தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அதுதான் நீங்கள் தமிழகத்திற்கு செய்யும்
நன்மை.
மாபா பாண்டியராஜன்
உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் கேட்கிறேன். அதிமுகவில்
தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மாபா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின்
நிலை என்ன? திமுகவில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார்
மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து
பேசி இருப்பீர்களா?
ராஜினாமா
உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இனியும் உங்களின் நடிப்பை
நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட
அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
பிளவுபடுமா?
இந்த கடிதத்தை விஜய் பவுல்ராஜ் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தந்துவிட்டு
அதன் நகலையும் பத்திரிகையாளர்களிடம் வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். இவரை
போலவே மேலும் சில தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தேமுதிக மீண்டும் பிளவுப்படுமோ என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

No comments:
Post a Comment