
பாகிஸ்தானுடன் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய
முப்படைகளின் சார்பில் இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு
நடத்தப்பட்டது.
ராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹல், விமானப்படை சார்பில்
ஆர்ஜிகே,கபூர், கடற்படை சார்பில் தல்பீர் சிங் குஜ்ரால் ஆகியோர் டெல்லியில்
இன்று இரவு 7 மணிக்கு, கூட்டாக நிருபர்களிடம் பேட்டியளித்தனர்.
ஆர்ஜிகே கபூர் கூறியதாவது: 27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்திய
வான் எல்லையை கடந்து வந்தன. ரஜோரி பகுதியில் எல்லையை கடந்து பாகிஸ்தான்
போர் விமானங்கள் வந்தன
மிக் 21 பைசன், மிராஜ் 2000 உள்ளிட்ட இந்திய விமானங்கள் அவற்றை வழி
மறித்தன. இதையடுத்து, பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய நிலைகளை
குறி வைத்து தாக்கின.
இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையால் எந்த சேதத்தையும் விளைவிக்க
முடியவில்லை. பாகிஸ்தானின் எப் 16 விமானம் ஒன்று, நமது, மிக் 21 பைசன்
விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பணியின்போது, இந்திய
விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் மாயமானது.
இந்திய விமானி ஒருவர், பாராசூட்டில் பாக் எல்லைக்குள் குதித்தபோது அந்த
நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார். நம்மால் சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 போர்
விமானத்திலிருந்து 2 விமானிகள் பாரசூட்டிலிருந்து அந்த நாட்டு
எல்லைக்குள், குதித்தனர். நேற்று இரு இந்திய விமானிகள் இருப்பதாக
பாகிஸ்தான் கூறியது. ஆனால், மாலையில்தான் 1 விமானி மட்டுமே தங்களிடம்
இருந்ததாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம்
உள்ளது. ரஜோரி கிழக்கு பகுதியில், எப் 16 விமானத்தில் பயன்படுத்தப்படும்,
வின்வெளி தாக்குதலுக்கான ஏவுகணையின் பகுதிகள் மீட்கப்பட்டது. எப் 16
விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த
ஏவுகணையின் ஒரு பகுதி நம்மிடம் சிக்கியுள்ளது. இது முக்கிய ஆதாரமாகும்.
இந்திய விமானப்படை எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.
விங் கமாண்டர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான்
கூறியுள்ளதற்கு வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து,
பாகிஸ்தான் விமானத்திலிருந்து தகர்க்கப்பட்டு விழுந்து கண்டெடுக்கப்பட்ட
ஏவுகணை துண்டுகளை பத்திரிகையாளர்களிடம் காண்பிக்கப்பட்டது. இது எப் 16 ரக
விமானங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏவுகணையாகும்.
விமானப்படை, தரைப்படை மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளின் பிரதிநிதிகள்
இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக
அறிவித்தனர். இந்த நிலையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான்கான் இன்று மாலை 4.30 மணியளவில் அறிவித்தார். இதையடுத்து
பத்திரிக்கையாளர் சந்திப்பு 7 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment