
பிப்ரவரி 01, 2019 அன்று பியுஷ் கோயல் பட்ஜெட் படிக்கத் தொடங்கியதில்
இருந்து, ஒட்டு மொத்த மக்களவையிலும் பாஜகவினர் தவிர மற்ற கட்சி எம்பிக்கள்
தங்கள் எதிர்ப்புகளை வலுவாக காட்டிக் கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தான் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயேட்சை என
எல்லோரும் ஆதரித்து மேஜையைத் தட்டினார்கள். அந்த ஒரு விஷயம் வருமான வரி
விலக்கு. விலக்கு என்பதை அழுத்திப் படிக்கவும்.
இதில் விலக்கு என்பதற்கும் வரம்பை உயர்த்துதல் என்பதற்கும் நிறைய பொருள்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் தவறாக நம் வருமான வரிகளை கணக்கிட்டு
கனவு காண்கிறோம். சொல்லப் போனால் மிச்சமாகும் வரிப் பணத்தை என்ன செய்யலாம்
என்பதை வரை ஸ்கெட்ச் போட்டு விட்டோம்.
நிதி அமைச்சர் சாதூரியம்
நிதி அமைச்சர் சாதூரியம்
பியுஷ் கோயல் என்ன பேசினார் "Individual taxpayers having taxable annual
income up to ` 5 lakhs will get full tax rebate and therefore will not
be required to pay any income tax" என்றார். இதில் rebate என்கிற
வார்த்தையை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்


தமிழாக்கம்
வருமான வரி செலுத்தும் தனி நபர்களின் ஆண்டு வருமானம் (வரி செலுத்தும்
வருமானம்) 5,00,000 ரூபாய்க்குள் இருப்பவர்கள் செலுத்த வேண்டிய வருமான
வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, வருமான வரி செலுத்த
கூடிய வருமானமாக (Taxable Income), ஆண்டுக்கு 5,00,000 ரூபாய் வரை
உள்ளவர்கள் இனி வரி செலுத்தத் தேவை இல்லை.


rebate என்றால்..?
rebate என்கிற ஆங்கில வார்த்தைக்கு அதே பொருள் தரும் சில ஆங்கிலச்
சொற்களைப் பார்த்தால் Discount, concession, deduction, reduction என்கிற
சொற்கள் கிடைக்கின்றன. ஆக நாம் செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி
செய்கிறார்கள் என்பது தான் பொருள். நாம் நினைப்பது போல இனி ஐந்து லட்சம்
ரூபாய் வரை வரி கட்டக் கூடாது என்று பொருள் தரவில்லை.


வித்தியாசம்
விலக்கு - நீங்கள் செலுத்த வேண்டிய வரியை இனி செலுத்த வேண்டாம் எனச்
சொல்வது தான் விலக்கு.
வரம்பு உயர்த்துதல் - இதுவரை 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள்
வரி செலுத்துகிறார்கள். இனி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள்
மட்டும் வரி செலுத்தினால் போதும் என்றால் 2.5 லட்சமாக இருந்த வரி வரம்பு 5
லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது எனப் பொருள்.


Taxable Income..?
மேலே சொன்னது போல வருமான வரி செலுத்தக் கூடிய வருமானம் (Taxable Income)
என்றால் என்ன..? உங்களுக்கு வரும் ஆண்டு மொத்த சம்பளம் அல்லது வருமானத்தில்
உங்களுக்கான வரிக் கழிவுகளான 80C முதலீடுகள் மற்றும் கழிவுகள், Section
24-ன் கீழ் கணக்கு காட்டும் வீட்டுக் கடனுக்கான வட்டி, 80D-ன் கீழ் கணக்கு
காட்டும் மருத்துவ காப்பீடுகள் பிரீமியம், 50,000 ரூபாய்க்கான நிலையான
கழிவுகள் (Standard Deduction) என எல்லாவற்றையும் கழித்த பின் வரும்
வருமானம் தான் இந்த Taxable income.


வரி கட்டணுமா..?
ஆம். இதை ஒரு சிறிய உதாரணத்தோடு பார்ப்போம். ஒரு நபருக்கு ஒரு வருடத்தில்
8,00,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது. அவர் செய்திருக்கும் முதலீடுகள் -
1,50,000 ரூபாய், நிலையான கழிவுகள் 50,000 ரூபாய் போக 8,00,000 - 1,50,000 -
50,000 = 6,00,000 ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். இப்போது அவர் பழைய
வரம்புகள் படிதான் வரி செலுத்த வேண்டும்.


எப்படி..?
முதலில் 0 - 2,50,000 ரூபாய் வரை வரி கிடையாது = 00,000 ரூபாய்
2,50,001 - 5,00,000 ரூபாய் வரை 05% வரி என்றால் = 12,500 ரூபாய்
5,00,001 - 6,00,000 ரூபாய் வரை 20% வரி என்றால் = 20,000 ரூபாய்
என பிரித்து பிரித்து வரி கணக்கிட்டு, மொத்தமாக 32,500 ரூபாய் வருமான
வரியாக செலுத்த வேண்டும். இந்த 32,500 ரூபாய்க்கு செஸ் வரியாக 4
சதவிகிதமும் சேர்த்து செலுத்த வேண்டும்.


அப்படின்னா தப்பா..?
இதுவரை எத்தனை லட்சம் ரூபாய் ஒரு வருடத்தில் சம்பாதித்தாலும் 5 லட்சம்
ரூபாய் வரை வரி செலுத்தத் தேவை இல்லை என நினைத்துக் கொண்டிருந்தது தவறு.
மேலே சொன்னது போல் taxable income 5,00,000 ரூபாய்க்கு மேல் வந்தால் மொத்த
தொகைக்கும் இப்போது இருக்கும் வரம்புகள் படித் தான் வருமான வரி செலுத்த
வேண்டும்.


எதிர்கட்சிகள்..?
இந்த விஷயத்தை பட்ஜெட் வெளியான அன்றே உரக்கப் பேசிய எதிர்கட்சிகளின் பேச்சை
யாரும் கவனிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள் கூட இந்த
நுணுக்கமான பிரச்னையை தங்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது தான் பலரும் பாஜக தங்களை ஏமாற்றிவிட்டது என குற்றம்
சுமத்திக் கொண்டே இந்த விஷயத்துக்கு கவனம் கொடுத்து தங்களுக்கான வரிக்
கணக்கீடுகளை மாற்றி கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில்
பிப்ரவரி 01, 2019 அன்றே நிதி அமைச்சக வலைதளத்தில் இந்த விவரங்கள்
வெளியாகிவிட்டது. அதை யாரும் கொஞ்சம் கவனமாக ஆராயவில்லை என்பது தான் உண்மை.


அதிக சம்பளதாரர்களுக்கு..?
மேலே சொன்னது போல் taxable income 5,00,000 ரூபாய்க்கு மேல்
இருப்பவர்களுக்கு மத்திய அரசு தன் பட்ஜெட்டில் Standard deduction-ஐ 40,000
ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக அறிவித்தது மட்டுமே உதவியாக இருக்கும்.
மற்றபடி மொத்த ஆண்டு வருமானமே 5.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருப்பவர்களுக்கு
மட்டுமே இது மிகப் பெரிய உதவியாக இருக்கும் என பட்டையக் கணக்காளர்கள்
(Chartered Accountants) சொல்கிறார்கள். ஆக இத்தனை நாட்கள் ஐந்து லட்சம்
ரூபாய் வரை வருமான வரி இல்லை என்று குருட்டுத்தனமாக நம்பியது தவறு. அதே
போல் இந்த 2,51,000 - 5,00,000 ரூபாய் வரையான தொகைக்கு 05% வரியாக 12,500
ரூபாய் செலுத்த வேண்டும். இந்த காசும் மிச்சம் என்பதால் இதர்கு ஸ்கெட்ச்
போட்டதும் மிகப் பெரிய தவறு.
No comments:
Post a Comment