Latest News

  

20 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை தழுவிய பாஜக!

கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியின் பாராளுமன்ற இடைத்தேர்தலில், 20 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது.

இந்த தேர்தலில் பாராளுமன்ற தொகுதிகளான சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம், மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதமும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 

அதன்படி பெல்லாரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஎஸ் உக்ரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்.பியும், பாஜக வேட்பாளருமான ஜே.ஷாந்தாவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

குறிப்பாக பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு பாஜக முதல் முறையாக தோல்வியடைந்துள்ளது அரசியலில் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரப்பா "இந்த வெற்றி மக்களுக்கானது, மதச்சார்பின்மைக்கானது" என்று கூறியுள்ளார். 

நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ராகவேந்திரா, மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் மது பங்காரப்பாவை, 52,148 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். 2014-ல் இதே தொகுதியில் எடியூரப்பா 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.