
பள்ளி ஆசிரியர், நீதிபதி, மக்கள் தொடர்பு அலுவலர், மன்னரின் அரசியல்
செயலாளர் என்று பல பதவிகளில் பணிபுரிந்திருந்த இவர், சுதந்திர இந்தியாவில்
உயர்ந்த அரசு பதவி தேடி வந்தும், அதனை ஏற்கவில்லை.
தன்னை
ஈர்த்த இயற்கை, கானுயிர்களை பற்றி எழுதுவது, புகைப்படம் எடுப்பது என காடு,
கானுயிர்கள் ஆய்வில் நாட்டம் கொண்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். தமிழின்
முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவையா தான் இவருடைய தந்தை.
‘சில்பஸ்ரீ’ என்ற இதழில் ரா.பி.சேதுபிள்ளை போன்ற தமிழறிஞர்களின்
எழுத்துகளுடன், இவரின் சிறு கதைகளும் வெளி வந்தன. பின்னர் ‘கலைமகள்’,
‘கல்கி’ ஆகியவற்றிலும் கானுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.
கானுயிர்களின் வாழ்வை எளிய தமிழில் துல்லியமாக எழுதினார்.
தனது
நண்பர் பெரியசாமி தூரனின் அழைப்பின் பேரில் கலை களஞ்சியத்தில் உயிரினங்கள்
பற்றி மிக அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை எழுதினார். இதில் அவர் செய்த
முக்கியமான பணி பாலூட்டிகளுக்கும், பறவைகளுக் கும் புழக்கத்திலிருக்கும்
சரியான பெயர்களை பயன்படுத்தியதுதான். எளிய மக்களிடம் இருக்கும் பாரம்பரிய
அறிவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான முதல்படி அது.
ஆங்கிலத்தில்கூட
இயற்கை பற்றியோ, கானுயிர் பற்றியோ ஆர்வம் காட்டாத காலத்தில் அறிவியல்
நோக்கில் கானுயிர் பற்றி தமிழில் முதலில் எழுதியவர் மா.கிருஷ்ணன். தான்
எழுதிய கட்டுரைகளுக்கு அவரே கோட்டோவியங்களும் வரைந்தார்.
‘கதிரேசஞ்செட்டியாரின் காதல்’ என்ற துப்பறியும் நாவலையும் எழுதியுள்ளார்.
தமிழகம்,
கர்நாடகம், கேரள மாநிலங்கள் இணைந்த முதுமலை பந்திப்பூர்வயநாடு வன உயிர்
சரணாலயமான ஆசிய யானைகளின் வாழ்விடம் உருவாக யோசனை தந்தவர். கானுயிர்களின்
பாது காப்புக்காக, எல்லைகள், நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை 14 மாநிலங்களில்
வரையறுத்து வனத்துறைக்குப் பெருமளவில் உதவியவர்.
இந்தியக்
கானுயிர் வாரியத்தில் முப்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். புலிகளைக்
காக்க 1970-ல் உருவாக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தில் இவருக்கு
முக்கியப் பங்கு உண்டு.
தேசியமும், பண்பாடும்,
இயற்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை எடுத்துரைத்த முதல் இயற்கை
ஆர்வலர்களில் ஒருவரான மா.கிருஷ்ணன், மண் மீதும் மனிதர்கள் மீதும் காட்டும்
பற்று மட்டுமல்ல, இயற்கையின் மீதும் கானுயிர்களின் மீதும் காட்டும் பற்றும்
நாட்டுப்பற்றுதான் என்கிறார்.
நன்றி :dailythanthi
No comments:
Post a Comment