Latest News

  

சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய?" - நீதிபதிகள் கேள்வி

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை சேலம் எட்டுவழி சாலைக்கு தொடக்கம் முதலே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க மாற்றம் எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. மேலும் சென்னை டு சேலம் இடையேயான பசுமை 8 வழிச்சாலை திட்டம் முதல்கட்டமாக 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது.

இது தொடர்பாக 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கையும் அனுப்பியது. எனினும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்குகளை சிலர் தொடுத்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு நிலத்தை கொடுக்க விருப்பம் இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாத இந்தச் சாலை அமைக்கப்படுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதோடு, தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நில உரிமையாளர் சிலரும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்குகளை தொடுத்தனர்.

இந்நிலையில் சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்குகளும், நில உரிமையாளர் தாக்கல் செய்திருந்த வழக்குகளும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலன சாலை திட்டங்கள செயல்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதிகள் குறுக்கிட்டு, நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விவசாய நிலங்கள், ஏரிகள் போன்றவை மனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதை யாரும் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளை தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.