சசிகலாவை தலைவராக ஏற்க முடியாது என ஓபிஎஸ் அணியினர் எடுத்த
முடிவினைதான், தற்போது தாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துள்ளதாக
முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18
பேரின் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று
மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான
வழக்கறிஞர், கட்சி தலைமை மீது மட்டுமே அதிருப்தி, கட்சி மீது இல்லை
என்றால், அதை கட்சிக்குள்ளேயே தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு
ஆளுநரிடம் எடுத்து சென்று பிரச்சினையை பெரிதுபடுத்திவிட்டதாக
தெரிவித்தார்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர், கட்சி தாவல் தடைச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை தகுதி
நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.
சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்
நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. கட்சி பிரச்சினையில் ஆளுநர் எப்படி
தலையிடமுடியும். பிப்ரவரி 18 நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பன்னீர்செல்வம்
அணியினருக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் உச்ச
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை தலைவராக ஏற்க முடியாது என
ஓ.பன்னிர்செல்வம் அணியினர் முடிவு செய்தனர்.
கட்சியின் சின்னம்
தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பன்னீர்செல்வம்
அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் எடுத்த
முடிவையே இன்று மொத்த கட்சியினரும் எடுத்துள்ளோம். முதலில்
பன்னீர்செல்வத்தை நாங்கள் எதிர்த்தாலும் தற்போது முடிவை மாற்றி
கொண்டுள்ளோம் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைய
தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்குகளுடன் முதல்வர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னிர்செல்வம் அணியினர் மீதான
புகாரில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தகுதிநிக்கம்
செய்யப்பட்ட வெற்றிவேல் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ-க்கள் தரப்பிலும், திமுக
கொறடா சக்கரபாணி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு முதல்வர்
பழனிசாமி தரப்பிலும் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கோரிக்கை
தொடர்பாக நாளை முடிவெடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment