Latest News

மத்திய அரசின் முத்தலாக் வரைவுச் சட்டம்: உத்தரப் பிரதேச அரசு ஆதரவு

முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் வரைவுச் சட்டத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த சட்ட முன்வடிவில் ‘‘சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்த வகையிலும் அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது அளித்து அவர்கள் கைது செய்யப்பட்டால் ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதி செய்யப்பட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உத்தரப் பிரதேச அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து அம்மாநில செய்தித்தொடர்பாளர் சித்தார்த்நாத் சிங் கூறுகையில் ‘‘முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரவுள்ள வரைவுச் சட்டம் தொடர்பாக மாநில அரசுகள் டிசம்பர் 10ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேச அமைச்சரவை கூடி, வரைவு சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது’’ எனக்கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.