Latest News

என் கணவனின் நீதிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்: கவுசல்யா சங்கர்


சாதிய கொடுமை காரணமாக தனது கணவனை இழந்த கவுசல்யா. தனது கணவனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் போராட்டத்தில் முழு போராட்டக்காரராக உருமாறி இருக்கிறார்.

சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம்  6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூன்று பேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

இந்த வழக்கில் கவுசல்யா சங்கர் சந்தித்த சவால்கள் குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

சாதி செல்வாக்கு சமூகத்தில் குறைந்து வருவதாகவும், அதனால் தவறான வன்முறைச் சம்பவங்களில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்ற கூற்றுக்கு நீங்கள் என்ன பதிலளிக்கிறீர்கள்?

இது உண்மை இல்லை. சாதிய பாகுபாடுகளில் ஈடுபடுபவர்களே இவர்கள்தான். சில நேரங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மிகக் கொடூரமாக உள்ளதால் மக்கள் தைரியமாக கொலையில் ஈடுபடுகிறார்கள். இந்த சமூகத்தில் சாதிய பாகுப்படுகள் இன்னமும் இருக்கின்றன.

சாதி தொடர்பான வன்முறையில் உங்கள் கணவனை இழந்து வீட்டீர்கள், இந்த வழக்கில் உங்கள் பெற்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடரும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

இந்த வழக்கைத் தொடர்ந்தது தொடர்பாக என்னை பலர் ஊக்கம் இழக்கச் செய்ய முயற்சி செய்தார்கள். எனது கணவனே உயிருடன் இல்லாத பட்சத்தில் எனது பெற்றோரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எனது குணநலன்கள் குறித்து விமர்சிக்கவும் செய்தார்கள்.

மேலும், நான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்று கூறிக் கொண்டால், இந்த வழக்கை நான் தொடரக் கூடாது என்றும் கூறினார்கள். நான் என் வலியுடன் தனியாக இருந்தேன். அவர்களுக்கு அதனைப் பற்றி ஒன்றும் தெரியாது.

நீங்கள் இந்த வழக்கைத் தொடர தீர்மானித்திருந்தாலும், இது உங்களுக்கு சோதனையான அனுபவமாக இருந்திருக்கும் அல்லவா, குறிப்பாக உங்களது பெற்றோருக்கு எதிராக?

எனது கணவருக்கு நீதி தேவை. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருந்தேன்.

உங்களது பயணத்தின் மூலம் நீங்கள் பெற்ற பலம் என்ன? தனிப்பட்ட நபர் அல்லது புத்தகம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதா?

அந்த சம்பவத்துக்குப் பிறகு, நிறைய நபர்கள் தனிப்பட்ட முறையில் என்ன சந்தித்து எனக்கு அவர்களது ஆதரவை அளித்தனர். பல தொண்டு நிறுவனங்களிலிருந்து என்னைச் சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக எனக்கு உற்சாகமும், ஆதரவும் அளித்தனர்.

ஒருவரது பெயரைக் குறிப்பிடுவது சரியாக இருக்காது. புத்தகங்களையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.  நான் நிறைய புத்தகங்கள் படித்து வருகிறேன். இவர்கள் அனைவரும் எனது எண்ணத்தை ஒட்டுமொத்தமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

சாதி தொடர்பான அட்டூழியங்களுக்கு எதிராக, குறிப்பாக கலப்பு சாதியில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை குறிவைக்கப்படுவது தொடர்பாக தனிச் சட்டம் வேண்டும் என்று பரிந்துரைக்கிறீர்கள். தனிச் சட்டம் ஏன் முக்கியம்? ஏற்கெனவே நிறைய வலுவான சட்டங்கள் இருக்கிறதே.....

சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.

கலப்புத் திருமணத்தால் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்காக தனிச் சட்டத்தை இலக்காக வைத்தே நான் இருக்கிறேன். ஏனெனில் கடுமையான தண்டனைகள்தான் குற்றங்களைத் தடுத்து நிறுத்தும்.

தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் கலப்பு சாதி திருமணங்களுக்கு எதிராக உள்ளவர்கள் குற்றம் புரிவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.

சங்கர் தனிப்பயிற்சி மையத்தை நீங்கள் தொடங்கக் காரணம் என்ன?

இளம் மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக உதவுவதே இதன் மைய நோக்கம். அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுத்து அவர்களது கல்விக்கு உதவ உத்தேசித்துள்ளேன். அவர்கள் பொறுப்புணர்வுள்ள ஆண்கள், பெண்களாக வளருவார்கள் என்ற நம்புகிறேன்.

தமிழில்: இந்து குணசேகர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.