நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உயர்
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை
உடனடியாக அமல்படுத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னை
கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு என்பவர்
உடபட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட
நிலம் பயன்படுத்தப்படாததால் திருப்பி ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்
நீதிமன்றத்தில் சோமு உள்ளிட்டோர் கடந்த 2013-ம் ஆண்டு மனு தாக்கல்
செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு
தீர்ப்பளித்தது. அதில் பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை திருப்பி அளிக்க
உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி
செய்யப்பட்டது.
இதையடுத்து நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி
மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர
பிரதாப் யாதவ், ,சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார்
ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நிலத்தை
திருப்பி ஒப்படைக்க அரசுத் தரப்பு அளித்த உத்தரவாதத்தின் பேரில் நேற்று
வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரக்கு இடம் இல்லை எனவும்
மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்
உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை
எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை
அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து ,வேறு
வழியை நாடக்கூடும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக
அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமைச் செயலாளருக்கு
தெரியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் தலைமைச் செயலாளர்
கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு
தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் நீதிபதிகள் சசிதரன்,
வேல்முருகன் அமர்வு முன்பு ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள் நிலத்தை
திரும்ப அளிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும்
வீட்டு வசதித்துறை சார்பிலும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த
நடவடிக்கையும் இல்லை. அதனால் தான் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
மேலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தினர்.
அப்போது
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மனுதாரர் வழங்கிய நிலம்
பயன்படுத்தப்பட்டு விட்டது. எனவே அந்த நிலத்தின் மதிப்பீட்டில் வேறு நிலம்
வழங்குவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட
நிலத்தை அளவிட வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உள்ளதாக கூறினர். மேலும்
மனுதாரருக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அரசுக்கு
உத்தரவிட்டு, வழக்கை புதன்கிழமைக்கு (நாளைக்கு) ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment