சி.பி.ஐ ரெய்டு பாஜகவின் அரசியல் சதி. அதனால் எல்லாம் நான் வீழ்ந்து
விட மாட்டேன் என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு கொதித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 - 2009 ஆண்டுகளில்
மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ராஞ்சி மற்றும் பூரி
நகரங்களில் ஐ.ஆர்.சி.டி.சி-யின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில
ஹோட்டல்களை கட்டமைப்பது மற்றும் பராமரிப்பதற்கு விடப்பட்ட டெண்டர்களில்
முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் டெண்டர் மற்றும் பராமரிப்புக்காக , லாலு பிரசாத் யாதவ் 2
ஏக்கர் நிலம் பரிசாக பெற்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது
தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
லாலு பிரசாத் யாதவ் மீது மட்டுமல்லாமல் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்
தேஜஸ்வி யாதவ், முன்னாள் பொதுத்துறை மந்திரி குப்தா மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி
மேலாளர் கோயல் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,
இவ்வழக்கு தொடர்பாக இன்று காலையிலிருந்து லாலு பிரசாத் யாதவ்
குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை
மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி, பாட்னா, ராஞ்சி, பூரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை
நடைபெற்று வருகிறது. சோதனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், "டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை. இந்த
ரெய்டு முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் சதியே. மத்திய அரசின் இந்த
நடவடிக்கையால் நானும், எனது கட்சியினரும் வீழ்ந்து விட மாட்டோம்" என லாலு
பிரசாத் யாதவ் அதிரடியாகக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment