சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால்
அவ்வழியாக சென்ற பேருந்தும் அதை தொடர்ந்து வந்த காருந்தும் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது. பின்னர் ராட்சத கிரேன்கள் மூலம் காரும், பேருந்தும்
பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே
உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற காரும் அதை
பின்தொடர்ந்து வந்த பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில்
பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எல்ஐசி, பாண்டி பஜார் உள்ளிட்ட
இடங்களில் கடந்த சில நாள்களாக திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணா மேம்பாலம் அருகே சர்ச் பார்க் பள்ளி அருகே கடந்த
சில நாட்களுக்கு முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அதிலிருந்து
ரசாயன திரவங்கள் கொப்பளித்ததாகவும் கூறப்பட்டது.
மெட்ரோ சுரங்க பணி
அந்த பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம்
உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே அண்ணா
சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி 25 ஜி என்ற மாநகர பேருந்து அண்ணா சாலை
வழியாக சென்று கொண்டிருந்தது.
திடீர் பள்ளம்
அப்போது சர்ச் பார்க் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நின்று
விட்டு பேருந்து புறப்பட்டது. பின்னால் வந்து கொண்டிருந்த கார் அந்த
பேருந்தை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் பெரிய அளவிலான
பள்ளம் ஏற்பட்டு பேருந்து கவிழ்ந்தது.
10 பேர் காயம்
முந்த முயன்ற காரும் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த
ராயப்பேட்டை போலீஸார், காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில்
சேர்த்துள்ளனர். இதையடுத்து போலீஸார் போக்குவரத்தை கடற்கரை சாலை வழியாக
திருப்பி விட்டனர்.
ராட்சத கிரேன்கள் மூலம் மீட்பு
இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தையும், காரையும் அகற்ற ராட்ச கிரேன்
வரவழைக்கப்பட்டது. சில மணிநேரங்களில் காரும் பேருந்தும் பாதுகாப்பாக
மீட்கப்பட்டன. இந்த திடீர் பள்ளமானது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும்
சின்னமலை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று
கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டு 4 மணி
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment