ஜெயலலிதா விதைத்து சென்றதை அறுவடை செய்கிறது தற்போதைய அதிமுக அரசு.
அதற்கான வேலையை தினமும் செய்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
2006 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை
இணைந்து போட்டியிட்டன.
அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக்
ஆகியவை இடம்பெற்றிருந்தன. 2005ல் ஆரம்பிக்கப்பட்ட விஜயகாந்த்தின் தேமுதிக
தனித்துப் போட்டியிட்டது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் திமுக 132 போட்டிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 48,
பாமக 31, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 13, இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளில்
போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் அதிமுக 188, மதிமுக 35, விடுதலைச்
சிறுத்தைகள் 9 தொகுதிகளில் போட்டியிட்டன.
கூட்டணிக்கு வெற்றி
திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக - 96
காங்கிரஸ் - 34 பாமக - 18, சிபிஎம் - 9 சிபிஐ - 6 தொகுதிகளில் வென்றன.
அதிமுக கூட்டணி 69 இடங்களில் வென்றன. அதிமுக - 61 மதிமுக - 6 விடுதலைச்
சிறுத்தைகள் - 2 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேமுதிக - 1 சுயேச்சை - 1
தொகுதிகளை கைப்பற்றினர்.
கூட்டணி ஆட்சி
தனிப்பெரும்பான்மைக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். ஆனால் திமுக வென்றது 96
இடங்களில்தான். எனவே, கூட்டணி ஆட்சியை நடத்தியது திமுக. அமைச்சரவையில்
கூட்டணியினருக்கு இடம் கொடுக்காமலேயே சாமர்த்தியமாக ஆட்சியை நடத்தியது.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு இந்த ஒரு காரணமே கேலி
செய்ய போதுமானதாக இருந்தது.
மைனாரிட்டி திமுக அரசு
திமுகவை பற்றி குறிப்பிட்டு வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும், மைனாரிட்டி
திமுக அரசு என்றே குறிப்பிடுவார். அந்த காலகட்டங்களில் நடைபெற்ற
பொதுக்கூட்ட உரைகளின்போதுகூட மைனாரிட்டி திமுக ஆட்சி என்ற ஜெயலலிதா
பேசுவார். இதை கேட்டு கேட்டு, முதல்வர் கருணாநிதியின் காதுகள்
புளித்துப்போயிருக்கும். ஆனால் அப்படி அழைப்பதில்தான் ஜெயலலிதாவுக்கு
அளவில்லாத ஆனந்தம் இருந்தது. ஐந்தாண்டு கால ஆட்சியின்போதும் இந்த வார்த்தை
திமுகவினர் காதுகளின் செவிப்பறைகளில் எதிரொலித்தபடியேதான் இருந்தது.
திமுகவின் பதிலடி
இப்போது திமுகவின் பதிலடி நேரம். தொடர்ந்து 2வது முறையாக அதிமுக வெற்றி
பெற்று ஆட்சியை பிடித்தாலும்கூட, அதன் முதல்வரான ஜெயலலிதா மரணமடைந்ததால்
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில்
தண்டனை பெற்று அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சி தலைவர்
என்ற முறையில் அவர் கூறும் ஆலோசனையைத்தான் கேட்டு அரசு செயல்பட வேண்டியது
கட்டாயம் என்பது திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்
கணிப்பு.
பினாமி அரசு
இதையே பிடித்துக்கொண்ட ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக
அரசை, பினாமி அரசு என்று அழைக்க தொடங்கியுள்ளார். அறிக்கை, பேட்டிகளில்
அந்த வார்த்தையை குறிப்பிடுகிறார். மைனாரிட்டி அரசு என்ற வார்த்தையைவிட,
பினாமி அரசு என்ற வார்த்தை மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது. இதை அதிமுக
தலைவர்களின் முக சுளிப்புகள் நன்கு காட்டிக்கொடுக்கின்றன. "தனது தந்தை
தலைமையிலான, அரசை கேலி செய்த ஜெயலலிதாவின் வழித்தோன்றல் அரசை, தனையன் பழி
தீர்க்கிறார்" என்று இதை புழகாங்கிதத்தோடு தெரிவித்தார் ஒரு திமுக
நிர்வாகி. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் போலும்.
No comments:
Post a Comment