புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளம் அரசு
மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் விழா இன்று நடைபெற்றது.
அந்த விழாவில் அத்தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் கலந்து கொண்டு
சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் அமைச்சர்
விஜயபாஸ்கர் இந்த விழாவில் திடீரென கலந்து கொள்வதாக அறிவித்ததோடு, திமுக
எம்எல்ஏ அங்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டாதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் பரவியதால், ஆத்திரமடைந்த திருவரங்குளம் மக்கள், அமைச்சர்
என்பதற்காக தங்களுடைய பிரதிநிதியான எம்எல்ஏ-வை அவமதிப்பதா என்று கேள்வி
எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எம்எல்ஏ மெய்யப்பனும் மறியல்
செய்தார். அப்போது போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் எம்எல்ஏ-வின் வேட்டி அவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர்
எம்எல்ஏ உள்பட மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில்
ஈடுபட்டனர். பிறகு வேனில் இருந்து இறங்கிய எம்எல்ஏ மீண்டும் ஆர்ப்பாட்டம்
செய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆலங்குளத்துக்கு
அழைத்து சென்றனர்.
இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை எதிர்ப்பு தெரிவித்து தீபா
பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து திருவரங்குளத்துக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை
உடையனேரி காலனியைச் சேர்ந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு திரும்பி
போகும்படி கூச்சலிட்டனர்.
பின்னர் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி பலத்த பாதுகாப்புடன் விழா
நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் ஒருவழியாக
மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். முன்னதாக, விழாவுக்கு வருகை
தரவிருந்த அமைச்சரை வரவேற்பதற்காக காலணியின்றி மாணவர்கள் வெயிலில் நீண்ட
நேரம் நின்றிருந்தனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment