500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற முடிவு அவசரகதியில்
எடுக்கப்பட்டது அல்ல என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்
தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், துணை
ஆளுநர் ஆர்.எஸ்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய
உர்ஜித் பட்டேல், நீண்ட ஆலோசனைக்கு பிறகே பணம் வாபஸ் பெறும் முடிவு
எடுக்கப்பட்டதாக கூறினார்.
மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு முன்பே தெரியும் என கூறிய
அவர், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு நாட்டில் உற்பத்தி துறை
பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார். இதன்
காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிதத்தில் இருந்து, 7.1-ஆக
குறையும் என ரிசர்வ் வங்கி கணக்கிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே புதிய 1000 ரூபாய் நோட்டுகள் பற்றி இதுவரை எந்த முடிவும்
எடுக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தட்டுப்பாடு
நிலைமை சீரான பின்னர் பணம் எடுப்பதற்கான வரம்பு தளர்த்தப்படும் எனவும்,
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் இதுவரை 11.85 லட்சம் கோடி
பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும்
ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக 100 மற்றும் 500
ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வருகவதாகவும் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment