ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய
நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இல்லை என்றும் பிரதமர் மோடியின் மோசடி
நாடகத்தால் மக்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு இன்னல்களை அனுபவிப்பார்கள்
என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய
பொறுப்பற்ற செயல் எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ்,
ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின்
அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த அறிவிப்பு மோடியால் எடுத்த அவசர
முடிவு. இந்த மோசடி நாடகத்திற்கு ரிசர்வ் வங்கியும் உடந்தையாக
இருந்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின்
பொருளாதாரம் பலவீனமாக இல்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட போது நடைபெற்ற
விவாதம் மற்றும் சட்ட ஒப்புதல் குறித்த ஆவணங்களை இதுவரை மத்திய அரசு
வெளியிடவில்லை. 11 கோடி பேர் தினமும் பணியை விட்டு விட்டு வங்கி வாசலில்
நிற்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்கள் ஆனாலும் தற்போதைய நிலைமை மாறாது.
இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி 62 முறை விதிகளை மாற்றியுள்ளதாக
குற்றஞ்சாட்டிய அவர், 400 கோடி ரூபாய் கள்ள நோட்டை ஒழிக்க 15 லட்சத்து 400
கோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது கொசுவை விரட்ட வீட்டைக்
கொளுத்துவதற்கு சமம் என்றும் குற்றஞ்சாட்டினார். கருப்பு பணத்தை ஒழிப்பதாக
கூறி 500,1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளனர். மாறாக புதிய
2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய
நோட்டுகளால் கருப்பு பணம் வராதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment